தலைவர் பதவியிலிருந்து புதின் இடைநீக்கம் ..!
கடந்த பல வாரங்களாக மேற்கத்திய நாடுகள் கணித்துவந்ததை ரஷிய அதிபர் புதின் தற்போது உண்மையாக்கி உள்ளார். நிலம், வான், கடல் வழியாக அண்டை நாடான உக்ரைன் மீது படையெப்பு நடத்தப்பட்டு வருகிறது.
இதன்படி உக்ரைன் மீது கடந்த வியாழக்கிழமை போரை தொடங்கிய ரஷியா, தொடர்ந்து மூர்க்கத்தனமான தாக்குதல்களை நடத்தி வருகிறது. இந்த போர் உலகம் முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது. சமூக வலைத்தளங்கான டுவிட்டர், பேஸ்புக் போன்றவற்றில் உக்ரைன்-ரஷியா போர் தொடர்பான வீடியோக்கள், புகைப்படங்கள் மற்றும் கள நிலவரங்கள் பகிரப்பட்டு வருகின்றன.
ரஷியா தொடுத்துள்ள போரில் 3 குழந்தைகள் உள்பட 198 பேர் இதுவரை உயிரிழந்து உள்ளனர் என உக்ரைன் சுகாதார மந்திரி தெரிவித்து உள்ளார். மேலும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி மேலும் கூறும் போது, “ராணுவ தளங்கள், ராணுவ உட்கட்டமைப்பு, உளவு அமைப்புகள் மீது மட்டுமே தாக்குதல் நடத்தி வருவதாக ரஷியா ராணுவம் கூறியிருந்தது அப்பட்டமான பொய். போர் தொடங்கியது முதல் தற்போது வரை ரஷ்ய படைகள் உக்ரைன் மக்களின் உள்கட்டமைப்புகளை தாக்கி வருகிறது. மருத்துவமனைகள் மீது ரஷ்ய படைகள் தாக்குதல் நடத்தி வருகிறது” என்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.
இந்நிலையில் உக்ரைன் மீதான ரஷியாவின் ஆக்கிரமிப்பு காரணமாக சர்வதேச ஜூடோ கூட்டமைப்பின் (ஐஜேஎஃப்) கவுரவத் தலைவர் பதவியில் இருந்து ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் இடைநீக்கம் செய்யப்பட்டதாக விளையாட்டு நிர்வாகக் குழு அறிவித்துள்ளது.
முன்னதாக தற்காப்புக் கலையான ஜூடோவில் பிளாக் பெல்ட் வாங்கியவர் புதின். பலமான தலைவராக மட்டுமின்றி, வலிமையான மனிதராகவும் தன் இமேஜைப் பார்த்துப் கொள்பவர் புதின். அவருக்கு 70 வயது என்றால் யாரும் நம்ப மாட்டார்கள். விளாதிமிர் புதின், லெனின்கிராட்டில் (தற்போது செயின்ட் பீட்டர்ஸ்பர்க்) ஒரு குடியிருப்புப்பகுதியில் கடினமான சூழல்களில் வளர்ந்தார். பெரும்பாலும் பெரிய மற்றும் வலிமையான உள்ளூர் சிறுவர்களுடன் அவர் சண்டையிட்டார். அதுவே அவரை ஜூடோ கற்கத் தூண்டியது குறிப்பிடத்தக்கது.