பிரதமர் மோடியின் வாழ்க்கைப் பயணத்தை சிறப்பிக்கும் ஓவியத்தை பரிசளித்த மாற்றுத்திறனாளி கலைஞர்

22.07.2022 13:01:19

பிரதமர் மோடியின் வாழ்க்கைப் பயணத்தை சிறப்பிக்கும் ஓவியம் அவருக்கு பரிசாக வழங்கப்பட்டது.

அசாமின் சில்சார் மாவட்டத்தைச் சேர்ந்த 28 வயது நபர் அபிஜீத் கோதானி. காது கேளாத மற்றும் வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளியான இவர் ஓவிய கலைஞர் ஆவார். இவரது ஓவிய திறனை கண்டு வியந்த அசாம் முதல் மந்திரி ஹிமந்தா பிஸ்வா, பிரதமர் மோடியை சந்திக்க வேண்டும் என்ற அபிஜீத் கோதானியின் நீண்ட நாள் கனவை நிறைவேற்றி உள்ளார். அதன்படி அபிஜீத் கோதானி அவரது தாயாருடன் பிரதமரை சந்திக்க இன்று டெல்லி வந்தார். அப்போது பிரதமர் மோடியின் வாழ்க்கைப் பயணத்தை சிறப்பிக்கும் ஓவியம் ஒன்றை அவர் பிரதமருக்கு பரிசாக வழங்கினார்.

அந்த ஓவியத்தில் பிரதமர் தனது தாயுடன் இருப்பது, ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் பிரதமர் பேசுவது, பிரதமரின் சிறுவயது புகைப்படங்கள் மற்றும் பிற சிறந்த பயணத்தை சித்தரிக்கும் படங்களை அவர் வரைந்துள்ளார். பிரதமர் உடனான சந்திப்பு பற்றி அபிஜீத் சைகை மொழியில் கூறுகையில், " பிரதமர் என் ஓவியத்தைப் பாராட்டியதும், அது மிகவும் அழகாக இருக்கிறது என்று விவரித்ததும் நான் நெகிழ்ந்து போனேன். பிரதமர் என்னை பாராட்டி என் முதுகைத் தட்டியபோது, நான் சிறப்பாக உணர்ந்தேன். எனது கலைப்படைப்பு மிகவும் சிறப்பாக உள்ளது என பிரதமர் பாராட்டினார். இன்று என் கனவு நிறைவேறிவிட்டது. " என தெரிவித்தார்.