போரில் உயிரிழந்தவர்களை நினைவுகூருவதை சர்வதேச சமூகம் மறக்காது

30.11.2021 15:53:43

சிறிலங்கா அரசாங்கம் ஏற்கனவே பாதிப்படைந்திருக்கும் அதன் நற்பெயருக்கு மேலும் களங்கத்தை ஏற்படுத்தும் வகையில் செயற்பட்டு வருவதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

தம்மால் இழைக்கப்பட்ட இனப்படுகொலையை மறைப்பதற்கு சிறிலங்கா அரசாங்கம் முயற்சித்தாலும், போரில் உயிரிழந்தவர்களை நினைவுகூருவதை சர்வதேச சமூகம் மறக்காது என கனடாவின் ப்ரம்ப்ரன் நகர முதல்வர் பட்ரிக் பிரவுன் (Patrick Brown) தெரிவித்துள்ளார்.

மாவீரர் தினமான கடந்த சனிக்கிழமை நினைவேந்தலைச் செய்வதற்காக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளர் சட்டத்தரணி கனகரத்தினம் சுகாஸ் உள்ளிட்ட சுமார் 60 பேர் ஊர்காவற்றுறை மாவீரர் துயிலும் இல்லத்திற்குச் செல்வதற்கு முற்பட்டபோது, அவர்கள் துப்பாக்கிகளைத் தரித்திருந்த படையினரால் தடுத்து நிறுத்தப்பட்டனர்.

அதனையடுத்து அவ்விடத்திலேயே அமர்ந்த அவர்கள், பின்னர் படையினரின் தடைகளை உடைத்துக்கொண்டு துயிலுமில்லத்திற்குச் சென்று ஈகைச்சுடரேற்றி அஞ்சலி செலுத்தினார்கள்.