இராணுவ வீரர்களுக்கு நிவாரணம்’

10.04.2024 07:37:43

அங்கவீனமுற்ற இராணுவ வீரர்களின் பாதுகாப்பு மற்றும் நலனுக்கு அரசாங்கத்தினால் முடிந்த அனைத்து நிவாரணங்களும் வழங்கப்படுமென ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உறுதியளித்தார்.

ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டேயில் அமைந்துள்ள பாதுகாப்பு அமைச்சின் தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற 'போரினால் பாதிக்கப்பட்ட இராணுவத்தினருக்கு மின்சார மோட்டார் சைக்கிள் வழங்கும்' நிகழ்விலேயே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

அதன்படி அங்கவீனமுற்ற இராணுவ வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தாரின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில், 17 மில்லியன் ரூபா செலவில் 50 மின்சார மோட்டார் சைக்கிள்கள் இதன்போது வழங்கப்பட்டன.

நிகழ்வில் அடையாள அம்சமாக அங்கவீனமுற்ற இராணுவ வீரர்கள் சிலருக்கு ஜனாதிபதியால் மின்சார சைக்கிள்கள் வழங்கி வைக்கப்பட்டது.

இங்கு மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, நாட்டின் ஒருமைப்பாட்டையும், சுயாதீனத் தனைமையையும் பாதுகாக்க உயிரைப் பணயம் வைத்து போராடிய இராணுவ வீரர்களுக்கு நன்றி கூறினார்.

அங்கவீனமுற்ற இராணுவ வீரர்களுக்கான மேலும் 76 மின்சார மோட்டார் சைக்கிள்களை கொள்வனவு செய்வதற்கான நிதி ஒதுக்குவதாக உறுதியளித்த ஜனாதிபதி, மற்றைய நாடுகளுடன் ஒப்பிடுகையில் இலங்கையின் பாதுகாப்பு அமைச்சு இராணுவ வீரர்களின் நலனுக்காக உயர்வான அர்பணிப்புடன் செயற்படுவதாகவும் தெரிவித்தார்