
ஷங்கர் - ராம் சரண் படத்தின் புதிய அப்டேட்
தமிழ் இயக்குனரான ஷங்கர், தெலுங்கில் ராம் சரண் நடிக்க உள்ள படத்தை இயக்கப் போகிறார். தமன் இசையமைக்க கியாரா அத்வானி கதாநாயகியாக நடிக்க உள்ளார். இப்படத்தின் வேலைகளுக்காக ஷங்கர் ஐதராபாத்திலேயே தங்கியுள்ளார். பாடல் பதிவு, முன் பணி தயாரிப்பு வேலைகள் என பிஸியாக இருக்கிறார்.
இப்போது படத்தைப் பற்றிய புதிய அப்டேட் தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. ஏற்கனவே சொன்ன மாதிரி ஒரே மூச்சில் படத்தை முடிக்க படக்குழு திட்டமிட்டுவிட்டதாம். செப்டம்பர் மாதம் முதல் வாரத்தில் படப்பிடிப்பை ஆரம்பித்து, அடுத்த வருட ஜுலைக்குள் அனைத்து வேலைகளையும் முடித்து தயாரிப்பாளரிடம் படத்தை ஒப்படைத்துவிடுவாராம் ஷங்கர். படத்தின் பெரும்பாலான படப்பிடிப்புகளை தெலங்கானா மாநிலத்திலேயே தான் படமாக்க உள்ளார்களாம். பாடல் காட்சிகளுக்கு வேண்டுமானால் வெளிநாடுகள் செல்ல வாய்ப்பிருக்கிறது.
ஷங்கர் இந்தப் படத்திற்கான திட்டமிடலைச் சரியாக செய்திருந்தாலும், 'இந்தியன் 2' விவகாரத்தில் நீதிமன்றத் தீர்ப்பைப் பொறுத்து ராம் சரண் படத்திற்கான படப்பிடிப்பில் மாற்றம் நிகழவும் வாய்ப்புள்ளது.