விடுதலக்காகப் போராடிய இனத்தை இன்று வாழ்வாதாரத்திற்காக போராட வைத்துள்ளது அரசு- சாணக்கியன்

18.10.2021 14:12:46

இனத்தின் விடுதலக்காகப் போராடிய இனத்தை, இன்று பசளைக்காகவும் போராடும் நிலைக்கு இந்த அரசும் அரசுடன் இணைந்துள்ளவர்களும் தள்ளியுள்ளார்கள் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

மேலும் இது விவசாயிகளின் பிரச்சனை மாத்திரமல்ல, சோறு சாப்பிடும் அனைவரினதும் பிரச்சனை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இன்றைய தினம் வெல்லாவெளியில் இடம்பெற்ற விவசாயிகளின் பிரச்சனைகளுக்கான தீர்வு கோரிய போராட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

நேற்றைய தினம் கடலில் ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் இன்று தரை வழிப் போராட்டமாக மாறியிருக்கின்றது. எங்களது இனத்தின் விடுதலைக்காகப் போராடிய இனத்தை இன்று வாழ்வாதாரத்திற்காகப் போராடும் நிலைமைக்கு இந்த அரசு தள்ளியிருக்கின்றது. நேற்றைய தினம் முல்லைத்தீவு மாவட்டத்தில் இருந்து பருத்தித்துறை வரை கடல் வழியாக எமது மீனவர்களின் வாழ்வாதாரத்துடன் சம்மந்தப்பட்ட சில பிரச்சனைகளை   அமைச்சர் டக்ளசும், அரசாங்கமும் கவனத்தில் எடுக்காத காரணத்தினால் கடல்வழிப் போராட்டம் நடாத்தப்பட்டது.

இன்று இரண்டாவது நாளாகத் தரைவழிப் போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. இது வடக்கு கிழக்கிலே  நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.

போராட்டம் என்பது அறிந்து வருவது. அதற்கு எவரையும் அழைக்க வேண்டிய அவசியமில்லை. இது மக்களுக்காக, விவசாயிகளுக்காகச் செய்யும் போராட்டம். ஆனாலும். நாங்கள் மண்வெட்டியை வைத்திருப்பது தான் விமர்சனப் பொருளாக இருக்கும். எம்மை விமர்சிப்பது பரவாயில்லை. இவ்வாறாகவாவது எமது போராட்டம் இந்த அரசுக்குப் போய்ச் சேர வேண்டும்” என்றார்.