குறைமதிப்பீட்டு பிரேரணை மீதான விவாதம் இன்று!

08.06.2022 10:15:49

அத்தியாவசியமான பொதுச் சேவைகளை இடையூறு இன்றிப் பேணுவதற்குத் தேவையான நிதியைத் திரட்டும் நோக்கில் பிரதமரினால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட குறைமதிப்பீட்டு பிரேரணை மீதான விவாதம் இன்று  நடைபெறவுள்ளது.

695 பில்லியன் ரூபாய் பெறுமதியான இந்தக் கூடுதல் மதிப்பீடு நேற்று பொது நிதி தொடர்பான குழுவினால் அங்கீகரிக்கப்பட்டது.
நிதியமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தனவின் தலைமையில் இந்த நிதிக்குழு கூட்டம் நடைபெற்றது.

துணை மதிப்பீட்டில் உள்ள 695 பில்லியன் ரூபாயில் 395 பில்லியன் மீள் செலவினமாகவும் 300 பில்லியன் மூலதனச் செலவினமாகவும் இருக்கும் என தெரிவிக்கப்படுகிறது.


இதன்படி, இந்த வருடம் ஜனவரி மாதம் முதல் அரச ஊழியர்களுக்கான 5,000 ரூபாய் கொடுப்பனவை மேற்கொண்டு வழங்குவதற்காக 87,000 மில்லியன் ரூபாயும் ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு வழங்கப்படும். 5,000 ரூபாய் கொடுப்பனவுக்காக 40,000 மில்லியன் ரூபாயும் மேலதிக கொடுப்பனவுக்காக 15,000 மில்லியன் ரூபாயும் ஒதுக்கப்பட்டுள்ளது.

695 பில்லியனாக மதிப்பிடப்பட்டுள்ள போதிலும் அத்தியாவசிய செலவுகள் தவிர்ந்த ஏனைய அனைத்து செலவுகளையும் குறைப்பதன் மூலம் 300 பில்லியனுக்கும் அதிகமான தொகையை இது சேமிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக நிதி அமைச்சின் செயலாளர் தெரிவித்தார்.