
மின்சார உற்பத்தியில் இலங்கை புதிய மைல்கல்!
இந்த ஆண்டு ஜூன் மாதத்தில் மின்சார உற்பத்தியில் 72% புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆற்றல்களிலிருந்து பெறப்பட்டதாக இலங்கை மின்சார சபை (CEB) தெரிவித்துள்ளது.
1990 ஆம் ஆண்டுக்குப் பின்னர் இந்த சாதனையை எட்டுவது இதுவே முதல் முறை என்று இலங்கை மின்சார சபையின் செய்தித் தொடர்பாளர் தம்மிக விமலவீர தெரிவித்தார்.
புதுப்பிக்கத்தக்க ஆற்றல்களிலிருந்து மின்சார உற்பத்தி கடந்த சில மாதங்களில் சுமார் 70 சதவீதத்தை எட்டியதாகவும் கூறிய அவர், எனினும் இந்த மாதம் அது 70 சதவீதத்தை விஞ்சியதாகவும் சுட்டிக்காட்டினார்.
நாடு முன்னர் கிட்டத்தட்ட 100% நீர் மின்சாரத்தை நம்பியிருந்ததிலிருந்து இந்த மைல்கல் ஒரு குறிப்பிடத்தக்க திருப்புமுனையைக் குறிக்கிறது.
தேசிய மின்சாரக் கட்டமைப்பில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆதிக்கத்தை மீட்டெடுப்பதற்கான இலங்கை மின்சார சபையின் நிலையான முயற்சிகளையும் இது பிரதிபலிக்கிறது என்றும் தம்மிக்க விமலவீர சுட்டிக்காட்டினார்.
கடந்த சில மாதங்களாக நாட்டில் நிலவும் சாதகமான வானிலை, சூரிய சக்தி, காற்றாலை மற்றும் சிறு நீர் மின் திட்டங்களில் தொடர்ச்சியான முதலீடுகள் மற்றும் மேம்பட்ட மின் கட்டமைப்பு ஒருங்கிணைப்பு ஆகியவை இந்த சாதனைக்குக் காரணம்.
2030 ஆம் ஆண்டுக்குள் ஆண்டுதோறும் 70% புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தியை அடைவதற்கான தேசிய இலக்கை நோக்கி இலங்கை நகர்ந்து வருவதாகவும் இலங்கை மின்சார சபையின் செய்தித் தொடர்பாளர் குறிப்பிட்டார்.