அடுத்த மாதம் முதல் நடைமுறையாகும் இரட்டை குடியுரிமையின் புதிய நடைமுறை

26.11.2022 10:01:27

இரட்டைக் குடியுரிமை வழங்குவதற்கான கட்டணம் 2,000 அமெரிக்க டொலர்களாக திருத்தப்பட்டுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.

இரட்டைக் குடியுரிமை பெறும் 22 வயதுக்குட்பட்ட மனைவி அல்லது குழந்தைக்கு இரட்டைக் குடியுரிமை வழங்குவதற்கான கட்டணம் 500 டொலர்களாக திருத்தப்பட்டுள்ளதாக திணைக்களத்தின் கட்டுப்பாட்டாளர் தெரிவித்துள்ளார்.

 

குடியுரிமையின் கீழ் வழங்கப்படும் சான்றிதழ்களின் சான்றளிக்கப்பட்ட நகல்களைப் பெறுவதற்கான கட்டணம் 2,000 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

சுற்றுலாப் பயணிகளுக்கு ஒன்லைனில் மின்னணு பயண அங்கீகாரத்தைப் பெறுவதற்கான கட்டணம் 50 டொலராகவும் வணிகங்களுக்கு 55 டொலராகவும் மாற்றப்பட்டுள்ளது.

குடியுரிமை விருந்தினர் திட்டத்தின் கீழ் கட்டணம் 200 டொலராக இருக்கும். வெளிநாட்டு கடவுச்சீட்டைக் கொண்ட இலங்கைப் பெற்றோரின் பிள்ளைகளுக்கு வீசா வழங்குவதற்கான கட்டணத்தை அறவிடும்போது வயது குழு கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுவதில்லை, அது 150 அமெரிக்க டொலர்களாக இருக்கும்.

இலங்கையர் அல்லாத வாழ்க்கைத் துணையை சார்ந்திருக்கும் குழந்தைகளுக்கான வீசா வழங்குவதற்கான கட்டணம் 150 டொலராக இருக்குமென்று குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் அறிவித்துள்ளது.

வரவு-செலவுத் திட்டத்தின் படி, குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம், விசாக்களுக்கான கட்டணங்கள் மற்றும் ஏனைய கட்டணங்களை டிசம்பர் முதலாம் திகதி முதல் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.