ஆடைத்தொழிற்சாலையில் தீ.

03.06.2026 08:39:53

எம்பிலிபிட்டிய பகுதியில் அமைந்துள்ள ஆடைத்தொழிற்சாலை ஒன்றில் புதன்கிழமை (03) காலை ஏற்பட்ட தீ விபத்தைத் தொடர்ந்து, குறைந்தது 22 பெண் ஊழியர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். எம்பிலிபிட்டிய - நோனாகம வீதியின் சுதுபாலம பகுதிக்கு அருகில் அமைந்துள்ள இந்த ஆடைத்தொழிற்சாலையின் களஞ்சிய அறை  ஒன்றினுள்ளேயே இந்தத் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவத்தின் போது தீக்காயங்களுக்கு உள்ளாகிய மற்றும் நச்சுப் புகையை சுவாசித்தமையால் பாதிக்கப்பட்ட ஊழியர்கள், அவசர சிகிச்சைக்காக எம்பிலிபிட்டிய மாவட்ட பொது வைத்தியசாலைக்கு விரைவாகக் கொண்டு செல்லப்பட்டனர்.

செவனகல தீயணைப்புப் பிரிவைச் சேர்ந்த தீயணைப்புப் படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, தற்போது தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் பணியில் ஈடுபட்டுள்ளனர். தீ விபத்து ஏற்பட்டதற்கான துல்லியமான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில், பொலிஸார் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.