தேசியத் தலைவர் பிரபாகரனைக் காப்பாற்றிய அறிவரண் பொட்டு அம்மான்!

24.05.2025 22:00:00

அறிவரண் தளபதி பொட்டு அம்மான்  அவர்கள் குறித்தான நூல் வெளியீட்டு நிகழ்வு புதுச்சேரி மாநிலம் திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பாக மே 18, 2025 அன்று மாலை 6 மணியளவில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வோடு நூல் வெளியிடப்பட்டது. இந்த நிகழ்ச்சியானது திராவிடர் விடுதலைக் கழகம் மற்றும் தோழமை ஒன்று கூடல் அலுவலகத்தில் நடத்தப்பெற்றது.

 

புதுச்சேரி மாநில தி.வி.க. தலைவர் தோழர் லோகு.அய்யப்பன் அவர்கள் இந்நிகழ்ச்சிக்கு தலைமைதாங்கினார். தோழர் சாந்தி நேசக்கரம் அவர்கள் எழுதிய அறிவரண் நூலை திராவிடர் விடுதலைக் கழகத்தின் தலைவர் தோழர் கொளத்தூர் மணி அவர்கள் வெளியிட அதனை சமூக நல தோழமை அமைப்புகளின் பொறுப்பாளர்கள் தோழர்கள் வந்தியத்தேவன் (ம.தி,மு.க.), மங்கையர் செல்வன் (தமிழ் மீனவர் விடுதலை வேங்கைகள்), பஷீர் (பீ போல்ட்), பிரகாஷ் (தலித் மக்கள் பாதுகாப்பு இயக்கம்), சாமிநாதன் (புதுச்சேரி யூனின் பிரதேச மாணவர் கூட்டமைப்பு), சிகாமணி (ஒடுக்கப்பட்ட சிறுத்தைகள்), தாமரை (இந்திய தேசிய இளைஞர் முன்னணி), பிராங்க்ளின்,  அரிமாவளவன், தமிழ்ச்செல்வன், அபிமன்னன்  (இராவணன் படிப்பகம்),  டேவிட் பெரியார் மற்றும் பலர் பெற்றுக்கொண்டனர்.

தோழர் கொளத்தூர் மணி அவர்கள் நீண்ட நெடிய உரையாற்றினார். அப்பொழுது தான் ஈழத்திற்குச் சென்றபொழுது பொட்டு அம்மான் உடனான தன்னுடைய நினைவுகளையும் பொட்டு அம்மானின் உளவறியும் ஆற்றலையும் பகிர்ந்துகொண்டார்.

"சிவசங்கரர் என்பதுதான் இயற்பெயர்,  பொட்டு அம்மான் என்பது இயக்கம் அவருக்கு வைத்த பெயராகும். நான் ஈழத்திற்கு சென்று 15 நாட்கள் தங்கியிருந்த போது பொட்டு அம்மான் அவர்கள் யாழ் மாவட்டத் தளபதியாக இருந்தார். அவர் தன்னைப் பாதுகாத்து தலைவரிடம் கொண்டுபோய் சேர்த்தது மட்டுமல்ல தன்னை மேலும் சில நாட்கள் அங்கேயே தங்கச்சொன்னார். இராணுவத்திடம் இருந்து தப்பிப்பதற்காக ஓரிடத்தில் அம்மானுடன் இரண்டரை நாட்கள் நான் தங்கினேன்.

போராளிகளிலேயே யாழ் மாவட்டப் போராளிகள்தான் ஆரம்ப கால கட்டங்களின் போது  நவீன ஆயுதங்களுடன் வலம் வந்தவர்கள். அதற்குக்  காரணம் பொட்டு அம்மான் தலைமையில் சிங்கள இராணுவத்துடன் சண்டையிட்டு அவர்களின் ஆயுதங்களை கைப்பற்றுவதில் வல்லவராக இருந்தார் என்பதுதான் காரணம்.

தலைவரைக் காப்பாற்றிய அறிவரண் பொட்டு அம்மான் வாழ்க்கை வரலாற்று நூல் நாம் அனைவரும் படிக்கவேண்டிய ஒன்று.

தனி ஈழம் பெறுவதற்கு நாம் அனைவரும் அரசியல் ரீதியிலான அழுத்தத்தை கொடுக்கவேண்டும். ஈழத்தில் பொது வாக்கெடுப்பு நடத்த ஆவணம் செய்ய நாம் அனைவரும் ஐ.நா.வை நிர்பந்திக்கவேண்டும்" என்ற செய்திகளோடு தன்னுடைய உரையை கொளத்தூர் மணி அவர்கள் நிறைவு செய்தார்கள்.

இந்நூல் வெளியீட்டு நிகழ்வை சாத்தியப்படுத்திய தி.வி.க. தோழர் தாமரை அவர்களுக்கு நன்றி அறிவித்தலோடு நிகழ்ச்சி நிறைவுற்றது. இந்நிகழ்ச்சியை தி.வி.க.வின் இளைஞர் அணி ஒருங்கிணைப்பு செய்திருந்தது.