
சிரஞ்சீவிக்கு வழிவிட்டு ஒதுங்கிய நந்தி
தற்போது ஆச்சார்யா படத்தை முடித்துவிட்ட சிரஞ்சீவி அடுத்ததாக மலையாளத்தில் மோகன்லால் நடிப்பில் வெற்றி பெற்ற லூசிபர் படத்தின் ரீமேக்கில் நடிக்கிறார். இந்தப்படத்தை மோகன்ராஜா இயக்குகிறார். இந்தக்கதைக்கு பொருத்தமான டைட்டிலை ஆலோசித்தபோது இயக்குனரும் சிரஞ்சீவியும் உட்பட அனைவருமே 'காட்பாதர்' என்கிற டைட்டில் பொருத்தமாக இருக்கும் என முடிவு செய்தனர்.
ஆனால் அந்த டைட்டிலை ஏற்கனவே பிரபல தெலுங்கு இயக்குனர் சம்பத் நந்தி என்பவர் தனது கதைக்காக பதிவு செய்து வைத்திருந்தார். ஆனால் தனது படத்திற்கு அந்த டைட்டில் தான் பொருத்தமாக இருக்கிறது என சிரஞ்சீவியே சம்பத் நந்தியை போனில் அழைத்து பேசியுள்ளார். சிரஞ்சீவியே கேட்கும்போது அதைவிட வேறு என்ன சந்தோசம் என காட்பாதர் டைட்டிலை தருவதற்கு சம்மதித்து விட்டாராம் சம்பத் நந்தி. ஒருவழியாக டைட்டில் பிரச்சனைக்கு தீர்வு எளிதாக கிடைத்துவிட்டது.