
மே.தீவுகளை வயிட் வோஷ் செய்தது பங்களாதேஷ்!
மேற்கிந்திய தீவுகள் அணிக்கெதிரான மூன்றாவதும் இறுதியுமான ஒருநாள் போட்டியில், பங்களாதேஷ் அணி 120 ஓட்டங்களால் அபார வெற்றிபெற்றது.
இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை பங்களாதேஷ் அணி, முழுமையாக கைப்பற்றி மேற்கிந்திய தீவுகள் அணியை வயிட் வோஷ் செய்தது.
சட்டோகிராம் மைதானத்தில் நேற்று (திங்கட்கிழமை) நடைபெற்ற இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற மேற்கிந்திய தீவுகள் அணி, முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது.
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி, நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 297 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, டமீம் இக்பால், ரஹீம் மற்றும் மொஹமதுல்லா ஆகியோர் தலா 64 ஓட்டங்களையும் சகிப் ஹல் ஹசன் 51 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
மேற்கிந்திய தீவுகள் அணியின் பந்துவீச்சில், அல்சார்ரி ஜோசப் மற்றும் ரெய்பர் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் மேயர்ஸ் 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.
இதனைத்தொடர்ந்து 298 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணி, 44.2 ஓவர்கள் நிறைவில் 177 ஓட்டங்களுக்கு சுருண்டது. இதனால் பங்களாதேஷ் அணி 120 ஓட்டங்களால் அபார வெற்றிபெற்றது.
இதன்போது அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, ரொவ்மன் பவல் 47 ஓட்டங்களையும் போனர் 31 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
பங்களாதேஷ் அணியின் பந்துவீச்சில், மொஹமட் சய்பூதின் 3 விக்கெட்டுகளையும் முஷ்டபிசுர் ரஹ்மான் மற்றும் மெயிடி ஹசன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் டஸ்கின் அஹமட் மற்றும் சௌமியா சர்கார் ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.
இப்போட்டியின் ஆட்டநாயகனாக முஷ்பிகுர் ரஹீம் தெரிவுசெய்யப்பட்டதோடு, சகிப் ஹல் ஹசன் தொடரின் நாயகனாக தெரிவுசெய்யப்பட்டார்.