தமிழ் தேசியக் கூட்டமைப்பாக ஒன்றிணைய வேண்டும்.

21.06.2025 10:05:03

அடுத்து வரும் மாகாணசபை தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பாக ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் (Selvam Adaikalanathan) தெரிவித்துள்ளார்.

இவ்வாறான சூழலை உருவாக்காத பட்சத்தில் மக்கள் தமிழ் கட்சிகள் மீது வெறுப்படைந்து தேசிய மக்கள் சக்திக்கு மீண்டும் ஆதரவளிக்கும் நிலை ஏற்பட்டு விடும் எனவும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

கொழும்பு ஊடகம் ஒன்றின் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட போதே அவர் இதனை குறிப்பிட்டார்.

 

 

தேசிய மக்கள் சக்தி ஆட்சியமைக்கும்

இங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், தமிழ் தேசிய கூட்டமைப்பு தேர்தல் கூட்டுக்காக உருவாக்கப்படவில்லை. பல இழப்புக்கள், பல தியாகங்கள் ஊடாக உருவாக்கப்பட்டுள்ள நிலையில் அதனை சிதைக்க முடியாது.

 

எனவே மக்களுக்காக ஒன்றிணைந்து பயணிப்பதை தமிழ் கட்சிகள் புரிந்துகொள்ள வேண்டும்.

 

எந்தவொரு அபிலாசைகளும் இல்லாத தேசியத்தை நேசிக்கின்ற பெரியவர்களை மத்தியஸ்தமாக கொண்டு தமிழ் தேசிய கூட்டமைப்பு மீளுருவாக்கம் செய்யப்பட வேண்டும். 

மாகாண சபை தேர்தலிலும் தேசிய மக்கள் சக்தி ஆட்சியமைக்குமாயின் தமிழ் கட்சிகள் தேசியம் தொடர்பில் கதைப்பதில் பிரயோசனமில்லை” என தெரிவித்தார்.