"போதையில்லா பொள்ளாச்சி".
|
தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை தொடங்கியுள்ள புதிய அமைப்பு சார்பாக பொள்ளாச்சியில் இன்று மாநாடு நடைபெறுகிறது. பாஜகவில் இருந்து விலகிய அண்ணாமலை, We the Leaders என்ற அமைப்பை தொடங்கிய நிலையில், இந்த அமைப்பு சார்பாக போதையில்லா பொள்ளாச்சி என்ற பெயரில் விழிப்புணர்வு மாநாடு நடைபெறுகிறது. தமிழக பாஜக தலைவராக 2021 முதல் 2025 வரை செயல்பட்டவர் அண்ணாமலை. 4 ஆண்டுகளில் அதிரடியான அரசியலை மேற்கொண்ட அண்ணாமலை, திடீரென அப்பதவியில் இருந்து நீக்கப்பட்டார். இதன்பின் சட்டசபைத் தேர்தல் முடிவுக்கு பின் பாஜகவில் இருந்து விலக அண்ணாமலை முடிவு செய்தார்.
|
|
அவர் தனிக்கட்சி தொடங்க உள்ளதாக சில ஆண்டுகளாகவே பேசப்பட்டு வந்தது. இதற்காக டெல்லி சென்ற அண்ணாமலை, மத்திய அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து தனது முடிவை கூறினார். இதன்பின் பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகுவதாக அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து அண்ணாமலை தனிக் கட்சி தொடங்குவதாக அறிவித்தார். அதற்கு முன்பாக ஒரு அமைப்பை உருவாக்க வேண்டும் என்று கூறி, We the Leaders என்ற அமைப்பை உருவாக்கினார். இந்த அமைப்பில் சுமார் 20 லட்சம் பேர் உறுப்பினர்களாக சேர்ந்து கொண்டனர். இன்னும் தமிழ்நாடு முழுவதும் உறுப்பினர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் அமைப்பை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்லும் வகையில் வி தி லீடர்ஸ் அமைப்பு சார்பாக பொள்ளாச்சியில் இன்று மாலை விழிப்புணர்வு மாநாடு நடைபெறுகிறது. போதையில்லா பொள்ளாச்சி என்ற பெயரில் அண்ணாமலை அமைப்பு விழிப்புணர்வு மாநாட்டை நடத்த உள்ளது. அண்ணாமலை தலைமையில் நடக்கும் இந்த மாநாட்டிற்காக பொள்ளாச்சி - கோவை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஆச்சிபட்டி அருகே 15 ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. மாநாட்டில் பங்கேற்பவர்களுக்கான குடிநீர், கழிப்பறை, மருத்துவக் குழு மற்றும் பார்க்கிங் வசதிகள் செய்யப்பட்டுள்ளன. பாஜகவில் இருந்து விலகிய பின் அண்ணாமலை செய்தியாளர்களை சந்திக்கவில்லை. செய்தியாளர்கள் கேட்ட போதும் அமைதி காத்து வந்தார். இந்த நிலையில் பொள்ளாச்சி மாநாட்டில் அண்ணாமலை என்ன பேசுவார் என்ற எதிர்பார்ப்பு அவரது ஆதரவாளர்களிடையே எழுந்துள்ளது. |