
யாழ்ப்பாண மக்களுக்கு இது மானப் பிரச்சினை!
தமிழனத்திற்கு முக்கியமான தேர்தலாக இந்தத் தேர்தல் இருக்கின்றது எனவும் யாழ்ப்பாணத் தமிழ் மக்களுக்கு மானப் பிரச்சினையாக இந்தத் தேர்தலை பார்க்கின்றேன் என்றும் பாராமன்ற உறுப்பினர் இ.சாணக்கியன் தெரிவித்தார்.
யாழ். சுன்னாகத்தில் நேற்றையதினம் இடம்பெற்ற தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
தமிழனத்திற்கு முக்கியமான தேர்தலாக இந்தத் தேர்தல் இருக்கின்றது. யாழ்ப்பாணத் தமிழ் மக்களுக்கு மானப் பிரச்சினையாக இந்தத் தேர்தலை பார்க்கின்றேன். யாழ்ப்பாண தமிழ் மக்கள் என்றால் கல்விக்கு பெயர் போனவர்கள்.
தற்போதைய உயர்தரப் பரீட்சை முடிவுகள்கூட அதனை வெளிக்காட்டுகின்றது. கடந்த பாராளுமன்றத் தேர்தல் முடிவுகள் உலகம் முழுவதும் கேள்வியை எழுப்பியுள்ளன. இதனை நிவர்த்தி செய்ய சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. அந்த மாற்றத்தைக் காட்ட தமிழரசுக் கட்சிக்கு வாக்களிக்க வேண்டும். வேறு கட்சிகளுக்கு வழங்கப்படும் வாக்குகள் வீணாகவே போகக் கூடும்.
ஏனைய தமிழ்க் கட்சிகளை நாங்கள் விமர்சிக்க விரும்பவில்லை. ஆனால் ஏனைய தமிழ்க் கட்சிகள் எங்களை விமர்சிக்கின்றார்கள். நாங்களும் கட்சியின் கட்டளையை மீறி எங்களை விமர்சிக்கும் கட்சிகளை நாங்களும் விமர்சிக்க வேண்டிவரும். எனவே யாழ்ப்பாணத்திலிருந்து எச்சரிக்கையாக கூறுகின்றேன். உங்கள் கட்சிக் கொள்கையை சொல்லி வாக்கு கேளுங்கள் என்றார்.