தடை செய்யப்பட்ட புலம் பெயர் தமிழ் அமைப்புக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தமாட்டோம் - அரசாங்கம் திட்டவட்டம்

16.10.2021 11:10:02

நாட்டில் தடை செய்யப்பட்ட நாடு கடந்த தமிழ் அமைப்புக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்போவதில்லை என அரசாங்கம் திட்டவட்டமாக அறிவித்துள்ளது.

உள்நாட்டுப் பிரச்சினைகள் உள்ளக பொறிமுறையின் ஊடாக தீர்க்கப்பட வேண்டும் என்றும் இது தொடர்பாக புலம்பெயர் தமிழர்களுடன் பேச்சுவார்த்தையை நடத்தப் போவதாகவும் ஐ.நா. பொதுச் செயலாளரிடம் அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச (Gotabaya Rajapaksa) உறுதியளித்திருந்தார்.

இந்த நிலையில், உலக தமிழர் பேரவை போன்ற தடைசெய்யப்பட்ட புலம்பெயர் அமைப்புகளுடன் நேரடி பேச்சுவார்த்தைகள் இருக்காது என வெளிவிவகார அமைச்சர், பேராசிரியர் ஜி. எல். பீரிஸ் (G L peiris) தெரிவித்துள்ளார்.

மேலும் நல்லிணக்க செயன்முறையின் ஒரு பகுதியாக அரச சார்பற்ற அமைப்புக்கள், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மற்றும் புலம்பெயர் உறுப்பினர்களுடன் கலந்துரையாட தயாராக இருப்பதாக அமைச்சர் கூறியுள்ளார்.

அந்தவகையில், 2021 ஐக்கிய நாடுகள் காலநிலை மாற்ற மாநாட்டில் இருந்து நாடு திரும்பியதும் அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ஷ தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்களை சந்திப்பர் என ஜி.எல்.பீரிஸ் தெரிவித்தார்.

உலகத் தமிழர் பேரவை, பிரித்தானிய தமிழர் பேரவை, கனேடிய தமிழ் காங்கிரஸ், அவுஸ்ரேலிய தமிழ் காங்கிரஸ், கனேடிய தமிழ் தேசிய கவுன்சில், தமிழ் இளையோர் அமைப்பு மற்றும் உலகத் தமிழர் ஒருங்கிணைப்பு குழு ஆகியன இலங்கையில் தடை செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.