
திருடர்கள் எனக் கூறியவர்கள் ஒன்றிணைகிறார்கள்!
குப்பைமேட்டை போன்றதாகவே எதிர்க்கட்சிகளின் தற்போதைய ஒன்றிணைவு காணப்படுகிறது. மக்கள் இனியொருபோதும் ஊழல்வாதிகளையும், நாட்டை வங்குரோத்து நிலைக்குத் தள்ளியவர்களையும் ஆட்சிக்கு கொண்டு வர போவதில்லை என போக்குவரத்து,நெடுஞ்சாலைகள் அபிவிருத்தி துறைமுகம் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார். |
அம்பாறை பகுதியில் 20ஆம் திகதி சனிக்கிழமை நடைபெற்ற மக்கள் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார். கடந்த காலங்களில் திருடர்கள், ஊழல்வாதிகள் என்று ஒருவரையொருவர் தூற்றிக்கொண்டவர்கள் இன்று ஒரே மேடையில் ஒன்றிணைந்துள்ளார்கள். அதிகாரத்தை கைப்பற்றுவதற்காக நாம் ஒருவரை ஒருவர் திருடர் என்று விமர்சித்துக்கொண்டோம் என்று ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் குறிப்பிட்டுள்ளார்.இதனை மக்கள் கூர்ந்து அவதானிக்க வேண்டும். 2024 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல், பொதுத்தேர்தல் ஆகியவற்றில் தோல்வியடைந்தவர்கள், திருடர்கள் அனைவரும் ஒரு பக்கமாக ஒன்றிணைந்துள்ளார்கள்.நாட்டு மக்கள் தேசிய மக்கள் சக்தி தலைமையிலான அரசாங்கத்தின் பக்கம் ஒன்றிணைந்துள்ளார்கள். எதிர்வரும் காலப்பகுதியில் நடைபெறும் தேர்தல்களின் போது தற்போது ஒன்றிணந்துள்ள திருடர்கள் அனைவரையும் ஒருமித்த வகையில் தோற்கடிக்க முடியும்.திருடர்கள் அனைவரும் ஒன்றிணைந்து மக்களின் அரசியல் தீர்மானத்தை இலகுப்படுத்தியுள்ளார்கள். மக்களின் பிரச்சினைகளுக்காகவா எதிர்க்கட்சியினர் ஒன்றிணைந்துள்ளார்கள்.இல்லை, சட்டத்தில் இருந்து எவ்வாறு பாதுகாப்பு பெறுவது,எதிர்காலத்தில் தமது அரசியலை எவ்வாறு வலுப்படுத்திக்கொள்வது என்பதற்காகவே தற்போது ஒன்றிணைந்துள்ளார்கள்.பழைய அரசியல் ஒருபோதும் வெற்றிப்பெறாது. எதிர்க்கட்சிகளின் ஒன்றிணைவுக்கு அச்சமடைய போவதுமில்லை,காலத்தை வீணடிக்க போவதுமில்லை.ஐக்கிய தேசியக் கட்சியின் மாநாட்டில் ஒன்றிணைந்தவர்களிடமும் ஒருமித்த தன்மை இல்லை.தனக்கு அழைப்பு விடுக்கவில்லை என்று கடந்த காலங்களில் ரணிலுக்காக குரல் கொடுத்த சீலரத்ன தேரர் குற்றஞ்சாட்டி, மாநாட்டையும், அந்தக் கட்சியையும் கடுமையாக சாடியுள்ளார். குப்பைமேட்டை போன்றதாகவே எதிர்க்கட்சிகளின் தற்போதைய ஒன்றிணைவு காணப்படுகிறது. எதிர்க்கட்சியினர் எதிர்காலத்திலேனும் தேர்தலில் வெற்றிப்பெற வேண்டுமாயின் மக்களாணையை விளங்கிக்கொள்ள வேண்டும். நாட்டு மக்கள் தேசிய மக்கள் சக்தி பக்கம் உள்ளார்கள்.ஆகவே மக்கள் இனியொருபோதும் ஊழல்வாதிகளையும், நாட்டை வங்குரோத்து நிலைக்குத் தள்ளியவர்களையும் ஆட்சிக்கு கொண்டு வர போவதில்லை என்றார். |