கனடாவிற்கு எச்சரிக்கை.

26.06.2025 08:36:27

கனடாவில் தொலைத்தொடர்பு அமைப்புகளை சீன ஹேக்கர்கள் தாக்கியதாக எச்சரிக்கை வெளியாகியுள்ளது. கனடா மற்றும் அமெரிக்காவின் சைபர் பாதுகாப்பு நிறுவனங்கள் கூட்டு எச்சரிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளன. அதில், சீன அரச ஆதரவு பெற்ற ஹேக்கர்கள் கனடாவின் தொலைத்தொடர்பு துறையை குறிவைத்துள்ளதாக தெரிவித்துள்ளன.

Canadian Centre for Cyber Security மற்றும் FBI இணைந்து வெளியிட்ட அறிக்கையில், Salt Typhoon என்ற ஹேக்கர் குழு கனடாவின் முக்கிய தொலைத்தொடர்பு நிறுவன உபகரணங்களில் மூன்று கருவிகளை முறைகேடாகப் பயன்படுத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த Salt Typhoon குழு, சீன அரசுடன் நேரடியாக தொடர்புடையது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அவர்களது செயற்பாடுகள் தொலைத்தொடர்பு துறையை தாண்டி, பல்வேறு முக்கிய கட்டமைப்புகளையும் பாதிப்பதாக அறிக்கையில் எச்சரிக்கப்பட்டுள்ளது.

சைபர் மையம் கூறுகையில், “இந்த தாக்குதல்களுக்கு சீன அரசின் ஆதரவு உறுதி செய்யப்படுகிறது, மேலும் இது தொடர்ந்து அதிகரிக்கக்கூடிய அபாயமாகவும் உள்ளது” என தெரிவித்துள்ளது.

இதற்கிடையில், பீஜிங் இந்த குற்றச்சாட்டுக்களை மறுத்துள்ளது. ஆனால், கடந்த ஜனவரியில் அமெரிக்கா, ஒரு சீன நிறுவனத்துக்கு எதிராக தடையையும், சீன உளவு அமைச்சையும் குற்றம் சாட்டி நடவடிக்கை எடுத்தது குறிப்பிடத்தக்கது.

அடுத்த இரண்டு ஆண்டுகளில், கனடாவின் தொலைத்தொடர்பு நிறுவனங்களை இத்தகைய ஹேக்கர்கள் தொடர்ந்து குறிவைக்க வாய்ப்பு அதிகம் என கணிக்கப்பட்டுள்ளது.