உலகளவில் விமானக் கட்டணங்கள் உயர்வு!

10.03.2026 14:19:48

மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர்ச் சூழல் காரணமாக சர்வதேச சந்தையில் விமான எரிபொருள் விலை பாரியளவில் அதிகரித்துள்ளதால் விமான டெக்கெட்டுக்கள் அதிகரித்துள்ளதாக கூறப்படுகின்றது. இதையடுத்து, குவாண்டாஸ் (Qantas) மற்றும் எயார் நியூசிலாந்து (Air New Zealand) உள்ளிட்ட முன்னணி விமான நிறுவனங்கள் தமது பயணக் கட்டணங்களை உயர்த்துவதாக அறிவித்துள்ளன.

    

 

போர் ஆரம்பமாவதற்கு முன்னர் 85 முதல் 90 டொலர்களாக இருந்த ஒரு பீப்பாய் விமான எரிபொருளின் விலை, சில தடவைகளில் 100 அமெரிக்க டொலர்களுக்கு மேல் சடுதியாக உயர்ந்ததால் விமான நிறுவனங்களின் இயக்கச் செலவுகள் 60% முதல் 70% வரை அதிகரித்துள்ளன.

இதன் காரணமாக எயார் நியூசிலாந்து உள்நாட்டுப் பயணங்களுக்கு 10 நியூசிலாந்து டொலர்களும், நீண்டதூர சர்வதேச பயணங்களுக்கு 90 நியூசிலாந்து டொலர்களும் கட்டணத்தை அதிகரித்துள்ளது. ஹொங்கொங் ஏர்லைன்ஸ் நிறுவனம் எரிபொருள் மேலதிக கட்டணத்தை (Fuel Surcharge) 35.2% வரை உயர்த்தியுள்ளது.

குறிப்பாக மாலைதீவு, பங்களாதேஷ் மற்றும் நேபாளத்திற்கான விமானக் கட்டணங்கள் கணிசமாக உயரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், ஐரோப்பா மற்றும் ஆசியாவிற்கு இடையிலான வான்பரப்புகள் மூடப்பட்டுள்ளதால், லண்டன் மற்றும் சூரிச் போன்ற நகரங்களுக்கான விமான சேவைகளை கதே பசிபிக் அதிகரித்துள்ளதுடன் கட்டணங்களையும் மீளாய்வு செய்து வருகின்றது.

வான்பரப்பு கட்டுப்பாடுகள் மற்றும் பாதுகாப்பு காரணங்களுக்காக விமானங்கள் மாற்று வழிகளில் பயணிக்க வேண்டியுள்ளதால் பயண நேரம் அதிகரித்துள்ளதுடன், இது உலகளாவிய சுற்றுலாத்துறையிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதன் காரணமாக தாய்லாந்து போன்ற நாடுகள் சுற்றுலா வருமானத்தில் பில்லியன் கணக்கிலான இழப்பைச் சந்திக்க நேரிடும் என எச்சரிக்கப்பட்டுள்ள நிலையில், பல நாடுகள் இந்த நெருக்கடியைச் சமாளிக்க எரிபொருள் வரிகளைக் குறைக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.