இந்தியா மற்றும் தாய்லாந்தில் மியன்மார் அகதிகள் 10 ஆயிரம் பேர் தஞ்சம்

22.06.2021 10:23:51

 

மியன்மாரில் நிலவும் அசாதாரண சூழல் காரணமாக, அங்கிருந்து 10 ஆயிரத்திற்கும் அதிகமானோர் இந்தியா, தாய்லாந்து ஆகிய நாடுகளில் தஞ்சம் புகுந்துள்ளதாக ஐ.நா. தெரிவித்துள்ளது.

இது குறித்து தெரிவித்துள்ள ஐ.நா., பொதுச் செயலாளரின் மியன்மாருக்கான தூதுவர், மியன்மாரில் நிலைமை மோசமாக உள்ளதாக தெரிவித்துள்ளார்.

மக்கள் தங்களை தாங்களே காப்பாற்றிக் கொள்ள தயாராகி வருகின்றனர் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

ஆயுதமேந்திய குழுக்களுடன் சேர்ந்து பலர் போர் பயிற்சியில் ஈடுபடுவதுடன், சுயமாக ஆயுதம் தயாரிக்கின்றனர் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இதனால், 1.75 இலட்சம் பேர் இடம் பெயர்ந்துள்ளனர் என்றும் அவர்களில், 10 ஆயிரத்திற்கும் அதிகமானோர் இந்தியா, மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளில் தஞ்சமடைந்துள்ளனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மியன்மாரில் இராணுவ ஆட்சி இடம்பெற்று வரும் நிலையில், மீண்டும் ஜனநாயக ஆட்சியை ஏற்படுத்த வலியுறுத்தி, மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனையடுத்து, இராணுவத்திற்கும் மக்களுக்கும் இடையில் பல இடங்களில் ஏற்பட்டுள்ள மோதலில் பல வன்முறைச் சம்பவங்கள் இடம்பெறுகின்றன.

இதனால், ஆயிரக்கணக்கானோர் இந்தியா மற்றும் தாய்லாந்து நாடுகளில் தஞ்சம் புகுந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.