சூடான தேர்தல் களம்.

09.03.2026 14:36:28

2026 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழ்நிலை நாளுக்கு நாள் சூடுபிடித்து வருகிறது. குறிப்பாக திமுக தலைமையிலான கூட்டணியில் தொகுதி பங்கீடு தொடர்பான ஆலோசனைகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. ஏற்கனவே காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், மற்ற கூட்டணிக் கட்சிகளுக்கான தொகுதி பங்கீட்டையும் திமுக முடிவு செய்து விட்டதாக அரசியல் வட்டாரங்களில் தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் புதன்கிழமைக்குள் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து இறுதி பட்டியலை வெளியிட திமுக திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தமிழகத்தில் அரசியல் கட்சிகள் தீவிரமாக செயல்படத் தொடங்கியுள்ளன. பல மாதங்களாக தமிழகத்திற்கு வராத தேசிய அரசியல் தலைவர்கள் கூட தற்போது அடிக்கடி தமிழகத்திற்கு வரத் தொடங்கியுள்ளனர். குறிப்பாக தேசிய கட்சிகளான காங்கிரஸ் மற்றும் பாஜக தலைவர்கள் அடிக்கடி தமிழகத்தில் ஆலோசனைகள் நடத்தி வருகின்றனர். இதற்கிடையில் திமுக தனது கூட்டணி தொடர்பான பணிகளை திட்டமிட்ட படி சிறப்பாகவே முன்னெடுத்து வருகிறது. மு.க.ஸ்டாலின் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு, ஒவ்வொரு பணியும் தனித்தனியாக மேற்கொள்ளப்படுகிறது.

கூட்டணி பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்கும் பொறுப்பு அமைச்சர் கேஎன் நேரு உள்ளிட்டோருக்கு வழங்கப்பட்டுள்ளது.தேர்தல் வாக்குறுதிகளை தயாரிக்கும் பணியில் எம்.பி. கனிமொழி உள்ளிட்டோர் ஈடுபட்டு வருகின்றனர். தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி பல ஆண்டுகளாக திமுக கூட்டணியில் இருந்து வருகிறது. இந்த முறை கூடுதல் தொகுதிகள், ஆட்சியில் பங்கு மற்றும் மாநிலங்களவை இடம் போன்ற கோரிக்கைகளை காங்கிரஸ் முன்வைத்ததாக கூறப்படுகிறது. ஆனால் கூடுதல் தொகுதிகளை வழங்க முடியாது என்று திமுக தரப்பில் தெளிவாக தெரிவிக்கப்பட்டது.

பின்னர் சில பல இழுபறிகளுக்குப் பிறகு திமுக - காங்கிரஸ் கூட்டணி உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போதைய சூழலில், திமுக தலைமையிலான கூட்டணியில் சுமார் 22 கட்சிகள் இடம்பெற்றுள்ளன. அதாவது, காங்கிரஸ், மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, மனிதநேய மக்கள் கட்சி, அகில இந்திய பார்வர்டு பிளாக், தமிழக வாழ்வுரிமை கட்சி, மக்கள் விடுதலை கட்சி, ஆதித்தமிழர் பேரவை, மக்கள் நீதி மய்யம், தேமுதிக, எஸ்டிபிஐ, மனிதநேய ஜனநாயகக் கட்சி, முக்குலத்தோர் புலிப்படை, கொங்கு இளைஞர் பேரவை, திராவிட வெற்றிக் கழகம், புதிய திராவிட கழகம்,கிறிஸ்தவ நல்லெண்ண இயக்கம் ஆகியவை உள்ளன.

திமுக தொகுதி பங்கீடு தற்போதுள்ள தகவல்களின் படி, கூட்டணிக் கட்சிகளுக்கு மொத்தம் 82 தொகுதிகள் ஒதுக்கப்படலாம் என கூறப்படுகிறது. அதன்படி காங்கிரஸ் - 28 தொகுதிகள் மற்றும் ஒரு மாநிலங்களவை இடம், தேமுதிக - 8 தொகுதிகள் மற்றும் ஒரு மாநிலங்களவை இடம், விடுதலை சிறுத்தைகள் - 8 தொகுதிகள், இந்திய கம்யூனிஸ்ட் - 6 தொகுதிகள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் - 6 தொகுதிகள், மதிமுக - 6 தொகுதிகள் என ஒதுக்கீடு செய்யப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது. மேலும் சில சிறிய கூட்டணிக் கட்சிகளுக்கும் 1 முதல் 2 தொகுதிகள் வரை வழங்கப்படலாம் என்று கூறப்படுகிறது.

இந்த பட்டியலில் மக்கள் நீதி மய்யம், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி, எஸ்டிபிஐ உள்ளிட்ட கட்சிகளும் இடம்பெறுகின்றன. உதயசூரியன் தமிழக சட்டமன்றத்தில் மொத்தம் 234 தொகுதிகள் உள்ளன. அதில் 82 தொகுதிகளை கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்க திட்டமிடப்பட்டுள்ள நிலையில், மீதமுள்ள 152 தொகுதிகளில் திமுக நேரடியாக தனது வேட்பாளர்களை நிறுத்த திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் சில கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளிலும் திமுக சின்னமான "உதயசூரியன்" சின்னத்தில் போட்டியிடும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்படலாம் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

குறிப்பாக மதிமுக, மக்கள் நீதி மய்யம், கொங்கு இளைஞர் பேரவை உள்ளிட்ட சில கட்சிகள் உதயசூரியன் சின்னத்திலேயே போட்டியிட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. இந்த அனைத்து ஆலோசனைகளையும் இறுதிப்படுத்தி, வரும் புதன்கிழமைக்குள் தொகுதி பங்கீடு தொடர்பான இறுதி பட்டியலை வெளியிட திமுக திட்டமிட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்களில் தகவல் வெளியாகியுள்ளது. இதனால் தமிழக அரசியல் களம் தேர்தலை முன்னிட்டு மேலும் பரபரப்பாக மாறி வருகிறது.