தினசரி 10 ஆயிரம் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதி - சபரிமலை ஐயப்பன் ஆலயம்

18.07.2021 15:26:11

 

சபரிமலை ஐயப்பனை தரிசனம் செய்வதற்கு, தினசரி 10 ஆயிரம் பக்தர்களை இன்று (சனிக்கிழமை) முதல் ஆலயத்திற்குள் அனுமதிக்க திருவிதாங்கூர் தேவஸ்தானம் தீர்மானம் எடுத்துள்ளது.

ஆடி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் ஆலய நடை நேற்று  முன்தினம் திறக்கப்பட்டது.

இந்நிலையில் நேற்று முதல் 21ஆம் திகதி வரை 5 நாட்கள் அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு, கணபதி ஹோமம், உஷ பூஜை, நிர்மால்ய தரிசனம், உச்ச பூஜையை தொடர்ந்து மதியம் 1 மணிக்கு நடை அடைக்கப்படும்.

அதன்பின்னர் 5 மணிக்கு நடை மீண்டும் திறக்கப்பட்டு, 6 மணிக்கு தீபாராதனை மற்றும் அபிஷேகம் செய்து, இரவு 9 மணிக்கு அரிவராசனம் பாடி நடை அடைக்கப்படும்.

மேலும் கொரோனா கட்டுப்பாடு தளர்வு காரணமாக இன்று முதல் தினசரி 10 ஆயிரம் பக்தர்கள், இணையத்தின் முன் பதிவு அடிப்படையில் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.