திருப்பரங்குன்றம் தீபம் வழக்கில் நிலைப்பாடு என்ன?
|
திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்றுவது தொடர்பாக தமிழ்நாடு அரசின் நிலைப்பாடு என்ன என்று வரும் 22 ஆம் தேதிக்குள் தெரிவிக்க உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. தற்போதைய அரசு தீபம் ஏற்றும் என நம்பிக்கை உள்ளதாக மனுதாரர் ராம ரவிக்குமார் தரப்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. திருப்பரங்குன்றம் தீபத்தூணிலும் தீபம் ஏற்றும் உத்தரவு தொடர்பான அரசின் முடிவு என்ன? நீதிமன்ற உத்தரவை நடைமுறைப்படுத்த முயற்சிக்கலாமே? அதில் என்ன சிக்கல் உள்ளது? இது ஜனநாயக நாடு. மக்கள் உணர்வுக்கு மதிப்பளிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை அமர்வு தெரிவித்துள்ளது.
|
|
மதுரை திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற உத்தரவிட வேண்டும் என கோரி மதுரை எழுமலையைச் சேர்ந்த ராம ரவிக்குமார் என்பவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணையில் தனி நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் தீபத்தூணில் தீபம் ஏற்ற உத்தரவிட்டார். இந்த நிலையில், மலை உச்சியில் தீபம் ஏற்றினால், மதரீதியான சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் அபாயம் இருந்தாக குறிப்பிட்டு, மதுரை ஆட்சியர் 144 தடை உத்தரவை பிறப்பித்தார். கடந்த கால சம்பவங்களின் அடிப்படையில் வன்முறை ஏற்படாமல் தடுக்கவும், பொது அமைதி மற்றும் பொது சொத்துகளுக்கு சேதம் ஏற்பாடாமல் இருக்கவும் தடை உத்தரவு பிறப்பிக்கப்பதாக ஆட்சியர் விளக்கம் அளித்திருந்தார். நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாத அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. மதுரை மாவட்ட ஆட்சியர், மதுரை காவல் ஆணையர், துணை ஆணையர், கோயில் செயல் அலுவலர் ஆகியவர்கள் மீது வழக்கு தொடரப்பட்டது. சட்டம் ஒழுங்கு காரணமாகவே இந்த உத்தரவுகள் பிறக்கப்பட்டதாக கூறி அவர்கள் நீதிமன்றத்தில் நிபந்தனையன்ற மன்னிப்பு கோரியிருந்தனர். இந்த வழக்கில் மதுரை மாவட்ட அரசு அதிகாரிகள் மீது பல்வேறு உத்தரவுகளை நீதிபதி பிறப்பித்திருந்தார். அந்த உத்தரவுகளை எதிர்த்து மாவட்ட ஆட்சியர், காவல் ஆணையர் உள்ளிட்டோர் தரப்பில் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. இந்நிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, தற்போதைய அரசு தீபம் ஏற்றும் என தங்களுக்கு முழு நம்பிக்கை உள்ளதாக மனுதாரர் ராம ரவிக்குமார் தரப்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து திருப்பரங்குன்றம் தீபத்தூணிலும் தீபம் ஏற்றும் உத்தரவு தொடர்பான தமிழக அரசின் முடிவு என்ன? என மதுரை அமர்வு கேள்வி எழுப்பியது. மேலும், அவமதிப்பு வழக்குகள் ஒரு பக்கம் இருக்கட்டும், தீபம் ஏற்றும் உத்தரவை நடைமுறைப்படுத்த அரசு முயற்சிக்கலாமே? இது ஜனநாயக நாடு, மக்கள் உணர்வுக்கு மதிப்பளிக்க வேண்டும், நடைமுறைப்படுத்துவதில் என்ன சிக்கல்? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். இதையடுத்து, உயர் அதிகாரிகளிடம் ஆலோசிக்க வேண்டுமென அரசு தரப்பு கூறியது. இதையடுத்து, திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்றுவது தொடர்பாக தமிழ்நாடு அரசின் நிலைப்பாடு என்ன என்று வரும் ஜூன் 22 ஆம் தேதிக்குள் தெரிவிக்க உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. |