"திருச்சி கிழக்கு விஜய் வென்ற தொகுதி, அங்கு காங்கிரஸ் போட்டியிடாது" .

08.06.2026 14:43:18

திருச்சி கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் போட்டியிட வாய்ப்பில்லை என்று அமைச்சர் ராஜேஷ் குமார் தெரிவித்துள்ளார். முதல்வர் விஜய் போட்டியிட்டு வென்ற தொகுதி என்பதால், தவெக வேட்பாளரே அங்கு போட்டியிட வாய்ப்பு உள்ளதாக கூறிய ராஜேஷ் குமார், திமுகவினரின் விமர்சனத்தை நாங்கள் கணக்கில் எடுத்து கொள்வதில்லை என்றும் தெரிவித்துள்ளார். தமிழக அரசியல் களம் நாளுக்கு நாள் மாறி வரும் சூழலில், திருச்சி கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பணிகளை அத்தனை கட்சிகளும் முடுக்கிவிட்டுள்ளன.

    

 

ஏற்கனவே முதல்வர் விஜய் திருச்சி கிழக்கு தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவிப்பு கூட்டத்திலேயே பிரச்சாரத்தை தொடங்கிவிட்டார். திமுகவும் வேட்பாளர் தேர்வு, பொறுப்பாளர்கள் நியமனம் என்று தீவிரமாக இருக்கிறது. இன்னொரு பக்கம் திருச்சி கிழக்கு தொகுதியில் எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைந்து பொது வேட்பாளரை நிறுத்த வேண்டும் என்ற குரல்கள் எழுந்துள்ளன. அதிமுகவில் இருந்து தவெக அடுத்தடுத்து முக்கிய நிர்வாகிகளை தூக்கி வரும் சூழலில், திடீரென நடிகர் ராகவா லாரன்ஸ் திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியிட போவதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

அதற்கேற்ப வியாழக்கிழமை காலை 9.30 மணிக்கு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட உள்ளதாக ராகவா லாரன்ஸ் அறிவித்துள்ளார். அவர் தவெகவில் இணைகிறாரா அல்லது அண்ணாமலை இயக்கத்தில் இணைகிறாரா என்ற விவாதங்களும் தொடங்கியுள்ளன. இதனிடையே திருச்சி கிழக்கு தொகுதியில் காங்கிரஸ் கட்சி போட்டியிட வாய்ப்பு உள்ளதாக சொல்லப்பட்டது. ராஜ்ய சபா சீட்டை காங்கிரஸ் பெற்றதை போல், திருச்சி கிழக்கு இடைத்தேர்தலிலும் காங்கிரஸ் சீட்டை பெறும் என்று சொல்லப்பட்டது. இந்த நிலையில் காங்கிரஸ் அமைச்சர் ராஜேஷ் குமார் விளக்கம் கொடுத்துள்ளார்.

இதுதொடர்பாக ராஜேஷ் குமார் பேசுகையில், திருச்சி கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் போட்டியிட வாய்ப்பில்லை. முதல்வர் விஜய் போட்டியிட்டு வென்ற தொகுதி என்பதால், தவெக வேட்பாளரே அங்கு போட்டியிடுவார். இதுதொடர்பாக முதல்வர் விஜய் முடிவு செய்வார். தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சிக்கு வாய்ப்பில்லை என்று திமுகவினர் கூறி வந்தனர். ஆனால் இன்று அதற்கான சூழல் வந்துள்ளது. 1967க்கு முன்பும், அதற்கு பின்பும் திமுக என்னென்ன செய்தது என்பதை சொன்னால், நேரம் போதாது. அதனால் திமுகவின் விமர்சனத்தை நாங்கள் பொருட்டாக கூட கணக்கில் எடுத்து கொள்வதில்லை என்று தெரிவித்தார்.