லண்டனில் வன்முறை.

01.09.2025 07:53:08

லண்டனில் நடைபெற்ற புகலிடக் கோரிக்கையாளர்கள் போராட்டத்தில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஞாயிற்றுக்கிழமை லண்டன் கேனரி வார்ப் பகுதியில் நடந்த புகலிடக் கோரிக்கையாளர்கள் எதிர்ப்பு போராட்டத்தில் வன்முறை வெடித்தது. அப்போது, பொலிஸ் அதிகாரி ஒருவரின் முகத்தில் போராட்டக்காரர்கள் தாக்கியதை அடுத்து நான்கு பேர் வரை அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர்.

அமைதியான முறையில் நடந்து வந்த இந்த போராட்டத்தில் முகமூடி அணிந்த மர்ம நபர்கள் புகுந்து பொலிஸ் அதிகாரிகளிடம் கடுமையாக நடந்து கொண்டுள்ளனர்.

மாலை 4.30 மணியளவில் போராட்டக்காரர்களில் சிலர் அருகில் இருந்த வணிக வளாகத்திற்குள் நுழைய முயன்றபோது களத்தில் வன்முறை வெடித்தது.

அப்போது பொலிஸ் அதிகாரி ஒருவர் முகத்தில் தாக்கப்பட்டார், ஆனால் அதிர்ஷ்டவசமாக அவர் பெரிய காயங்கள் எதுவும் இல்லாமல் தப்பினார்.

இந்த சம்பவத்தை தொடர்ந்து 4 பேர் கைது செய்யப்பட்டு அவர்கள் மீது போதைப்பொருள் வைத்திருந்தது, காவல்துறை அதிகாரியை தாக்கியது மற்றும் பொது ஒழுங்கை மீறியது ஆகிய குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளது.

50 முதல் 100 பேர் வரை கலந்து கொண்ட இந்த போராட்டம் மான்செஸ்டரில் இருந்து வெஸ்ட்பெர்ரி E14 சாலை வரை நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.