அணு ஆயுதப் போர் பயிற்சியில் தீவிரம் காட்டும் ரஷ்யா!

20.05.2026 08:20:36

உக்ரைனுக்கு எதிரான போர் நடவடிக்கை தீவிரமடைந்து வரும் நிலையில் ரஷ்ய தன்னுடைய அணு ஆயுத போர் பயிற்சியை தொடங்கியுள்ளது. உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் நடவடிக்கை தீவிரமடைந்து வரும் இந்த சூழ்நிலையில், உக்ரைனிய நகரங்களை குறிவைத்து செவ்வாய்க்கிழமை ரஷ்யா மிகப்பெரிய ட்ரோன் தாக்குதலை முன்னெடுத்துள்ளது. ரஷ்யாவின் இந்த தாக்குதலில் 500-க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் மற்றும் 20க்கும் மேற்பட்ட பாலிஸ்டிக் மற்றும் குரூஸ் ஏவுகணைகள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

 

செர்னிஹிவ் மற்றும் சுமி ஆகிய பகுதிகளில் நடத்தப்பட்ட தாக்குதல்களில் 4 பேர் வரை கொல்லப்பட்டு இருப்பதுடன் பலர் காயமடைந்துள்ளனர்.

உக்ரைனிய ஜனாதிபதி ஜெலென்ஸ்கி வெளியிட்ட தகவலில் 3 குழந்தைகள் உட்பட 24 க்கும் மேற்பட்ட மக்கள் தாக்குதலில் காயமடைந்து இருப்பதாக தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் வான்வழி தாக்குதலுக்கு மத்தியில், ரஷ்யா தீவிரமான அணுஆயுத போர் பயிற்சியையும் தீவிரப்படுத்தியுள்ளது.

மே 19 முதல் 21ம் திகதி வரை என 3 நாட்கள் தீவிரமான அணு ஆயுத போர் பயிற்சியை ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

இதில் 64,000க்கும் அதிகமான வீரர்கள் பங்கேற்கின்றனர். மேலும் 140 க்கும் அதிகமான போர் விமானங்கள், 73 போர்க்கப்பல்கள், 13 நீர்மூழ்கிக் கப்பல்கள் என பெரும் படை இந்த பயிற்சியில் ஈடுபடுத்தப்பட உள்ளது.