கொரோனாவை தொடர்ந்து நம்மை அச்சுறுத்தும் நிபா வைரஸ்

07.09.2021 05:06:00

கொரோனாவை தொடர்ந்து நம்மை அச்சுறுத்தும் நிபா வைரஸ் குறித்து நாம் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியமாகிறது.

கொரோனா அளவிற்கு நிபா வைரஸ் பரவ கூடியது அல்ல என்றாலும், 10 சதவீதற்கும் குறைவாக ஒரு நோயாளியிடமிருந்து மற்றொருவருக்கு பரவ வாய்ப்பு உள்ளதாக கூறுகின்றனர்.

சுகாதார நிபுணர்கள் கடந்த 20 ஆண்டுகளில் உலகெங்கும் 700 பேர் மட்டுமே நிபா வைரஸ் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். இந்தியாவில் இதற்கு முன்பு கடந்த 2001 மற்றும் 2007 ஆம் ஆண்டுகளில் மேற்கு வங்காளத்திலும், 2018 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் கேரளாவிலும் நிபா வைரஸ் கண்டறியப்பட்டது.

வெளவால்கள் தான் இவ்வகை வைரசின் பிறப்பிடம் என ஆய்வுகள் கூறுகின்றன. ஆஸ்திரேலியா, மலேசியா, சிங்கப்பூர், பங்களாதேஷ் ஆகிய நாடுகளில்1990ஆம் ஆண்டுகளில் நிபா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

இந்த வைரஸ், மனித உடலுக்குள் புகுந்த 4 முதல் 14 நாட்களில் நோய் அறிகுறி தென்படும் என்றும் இரத்தம், சிறுநீர், தொண்டையிலிருந்தும், மூக்கிலிருந்தும் வெளியாகும் சளி போன்றவற்றிலிருந்து எடுக்கப்படும் மாதிரிகளை ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தி இவ்வகை வைரஸ் பாதிப்பை கண்டறிய முடியும் என்றும் மருத்துவர்கள் கூறுகின்றனர்.

கடுமையான மூச்சுத்திணறல், காய்ச்சல், தலைவலி, உடல் சோர்வு, மனிதர்களிடையே பரவுவதற்கான வாய்ப்பு, போன்ற அறிகுறிகளுடன், நிபாவின் இறப்பு சதவீதம் 50 முதல் 75 சதவீதமாக இருப்பது அதன் கொடிய தன்மையாக பார்க்கப்படுகிறது. நிபா வைரசுக்கான சிகிச்சை அளிப்பதற்காக இதுவரை எந்த மருந்தும் அங்கீகரிக்கப்படவில்லை. உடல்நலக் குறைவுக்கான சிகிச்சை அளிக்க கூடிய மருந்துகள் மட்டுமே உலக சுகாதார நிறுவனத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ளன

நிபா வைரஸ் குறித்து பரப்பப்படும் வதந்திகள் பெரும் சவாலாக தற்போது வரை இருந்து வரும் நிலையில், தொடர்ந்து மக்கள் இந்த வைரஸ் குறித்து விழிப்புடன் இருக்க வேண்டும் என்று சுகாதார நிபுணர்கள் வலியுறுத்துகின்றனர்.

நிபா வைரஸ் தொற்று பரவியதாக தெரியவந்தால் விலங்குகள் வசிக்கும் இடங்களை கிருமி நாசினி கொண்டு சுத்தப்படுத்துவதுடன் அது போன்ற விலங்குகளை தனிப்படுத்த வேண்டும். நிபா வைரஸ் தாக்கி இறந்த விலங்குகள் உடல்களை பாதுகாப்பான முறையில் எரிக்க வேண்டும். பன்றிகளும், பழந்தின்னி வவ்வால்களும்தான் நிபா வைரஸ் பரவலுக்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது. எனவே கடிக்கப்பட்ட பழங்கள் உண்பதை தவிர்ப்பதுடன் மற்ற பழங்களை நன்கு கழுவியும் உண்பது வைரஸ் பரவலை தடுக்க உதவும் என்று சுகாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.