அமெரிக்காவில் தீவிரமடையும் நிர்வாக முடக்கம்.
அமெரிக்க அரசாங்க நிதி முடக்கத்தின் காரணமாக, எப்.ஏ.ஏ எனும் விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு ஆணையத்தின் உத்தரவின்படி, 1,400க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
அமெரிக்க பாராளுமன்றில் நிதி சட்டமூலத்திற்கு அனுமதி கிடைக்காத காரணத்தால், அரச துறைகளுக்கு நிதி ஒதுக்க முடியாமல், அன்றாட பணிகள் ஸ்தம்பித்துள்ளன.
இதன் ஒரு பகுதியாக, அமெரிக்க விமான போக்குவரத்தும் பாரிய இடையூறுகளை சந்தித்து வருகிறது.
அதன்படி வான்வழி போக்குவரத்து கட்டுப்பாட்டாளர்கள் மற்றும் ஊழியர் பற்றாக்குறை காரணமாக 1400 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
இதவேளை, நேற்றைய (8) தினத்தில் மாத்திரம் 6000 விமானங்கள் தாமதமடைந்துள்ளன.
இதனால் பயணிகள் பாரிய நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளனர்.
பாதுகாப்பு ஆய்வாளர்கள் உள்ளிட்ட விமான போக்குவரத்துத்துறை ஊழியர்களில் பெரும் பகுதியினர் சம்பளமில்லாத விடுமுறையில் அனுப்பப்பட்டனர்.
குறைந்த எண்ணிக்கையிலான ஊழியர்கள், சம்பளமில்லாமல் தொடர்ந்து வேலைக்கு வரவேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.
இவர்களில் பலர் உடல் நிலையைக் காரணம் காட்டி விடுப்பு எடுத்துள்ளனர்.
இதையடுத்து, போதிய பணியாளர்கள் இல்லாததால், விமான போக்குவரத்தை ஆணையத்தால் பாதுகாப்பாக கையாள முடியவில்லை.
இதையடுத்து ஆணையம் உத்தரவிட்டதைத் தொடர்ந்து, விமான நிறுவனங்கள் தங்களின் விமான இயக்கத்தை குறைத்ததையடுத்து, 1,400க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.
அட்லாண்டா, டென்வர், நியூவார்க், சிகாகோ, ஹூஸ்டன் மற்றும் லொஸ் ஏஞ்சல்ஸ் உள்ளிட்ட 40 முக்கிய விமான நிலையங்கள் பாதிப்புக்குள்ளாகியுள்ளன.
பணியாளர் பற்றாக்குறையால், 40 முக்கிய விமான நிலையங்களில் 10 சதவீத விமானங்களை குறைக்குமாறு உத்தரவிடப்பட்டது.
இந்த நிலை தொடர்ந்தால் 20 சதவீதம் வரை விமானங்களை குறைக்க வேண்டிய நிலை ஏற்படும் என கூறப்படுகிறது.
இதேவேளை, அமெரிக்க அரசு நிர்வாகம் முடக்கம் தொடர்பாக, ஜனநாயகக் கட்சியினருடன் விரைவில் சமரசம் செய்ய வாய்ப்பில்லை என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் ஜனாதிபதியாக இரண்டாவது முறையாக பதவியேற்ற டொனால் டிரம்ப், முந்தைய ஜனாதிபதி ஜோ பைடன் அரசின் பல்வேறு திட்டங்களையும், கொள்கைகளையும் மாற்றி அமைத்து வரும் நிலையில் அமெரிக்க பாராளுமன்றத்தில் ட்ரம்ப் கொண்டு வரும் மசோதாக்களுக்கு ஜனநாயக கட்சி உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்ற நிலையில் நிதி சட்டமூலத்திற்கும் இதுவரை அனுமதி கிடைக்காமல் அமெரிக்காவில் இவ்வாறான நிலை ஏற்பட்டுள்ளது.