பிரதமர் சுனக்கின் சொந்த தொகுதியில் இழுபறி

01.04.2024 01:18:37

லண்டன்: இங்கிலாந்தில் நடத்தப்பட்ட மெகா கருத்து கணிப்பில் உடனே தேர்தல் நடத்தப்பட்டால் ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சிக்கு கடும் தோல்வி ஏற்படும் என்று கூறப்பட்டுள்ளது. இங்கிலாந்தில் இந்திய வம்சாவளியான பிரதமர் ரிஷி சுனக் தலைமையில் கன்சர்வேட்டிவ் கட்சி ஆட்சி நடக்கிறது. அங்கு இந்த ஆண்டு இறுதியில் பொது தேர்தல் நடக்க உள்ளது. இந்நிலையில், நாட்டில் உள்ள 15,029 மக்களிடம் கருத்து கணிப்பு நடத்தப்பட்டது.

இதன் முடிவுகள் சண்டே டைம்ஸ் என்ற பத்திரிகை வெளியிட்டுள்ளது. அதில், உடனே தேர்தல் நடத்தப்பட்டால் ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சிக்கு மிக பெரிய தோல்வி ஏற்படும். எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சிக்கு கன்சர்வேட்டிவ் கட்சியை விட 19 % அதிகமான வாக்குகள் கிடைக்கும். தொழிலாளர் கட்சி 45 % வாக்குகளை பெறும். ஆளும் கட்சிக்கு 100க்கும் குறைவான இடங்களே கிடைக்கும். எதிர்க்கட்சியினர் 468 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைப்பர்.

பொது தேர்தலில் இதுவரையில்லாத படுமோசமான தோல்வியை கன்சர்வேட்டி கட்சியினர் சந்திக்க நேரிடும். ரிச்மாண்ட் தொகுதியில் வெற்றி பெற்றுள்ள ரிஷி சுனக் அ ந்த தொகுதியில் தொழிலாளர் கட்சியை விட 2.4 சதவீதம் கூடுதலாக வாக்குகள் பெற்று இழுபறி நிலையில் உள்ளார் என கூறப்பட்டுள்ளது. இங்கிலாந்தில் வரும் அக்டோபர் அல்லது நவம்பர் மாதத்தில் பொது தேர்தல் நடத்தப்படலாம் என தெரிகிறது.