அணுஆயுத ஒப்பத்தத்தில் ஈரானுடன் இணைய அமெரிக்கா தயார்!

29.01.2021 08:34:39

ஈரான் விதிகளுக்கு ஒப்புக் கொண்டால் அமெரிக்கா அணுஆயுத ஒப்பத்தத்தில் இணைய தயாராக இருப்பதாக அமெரிக்க வெளிவிவகார அமைச்சர் ப்ளிங்கின் தெரிவித்துள்ளார்.

ட்ரம்ப் நிர்வாகம் ஆட்சியில் இருந்த போது, அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டது.

இந்த உறவினை புதுப்பிப்பதற்கு ஜோ பைடன் நிர்வாகம் முயற்சி செய்து வருகின்றது. இந்தநிலையில் இதுகுறித்து ப்ளிங்கின் கூறுகையில்,

‘அனைத்து விதிமுறை கட்டுப்பாடுகளுக்கும் ஈரான் ஒப்புக் கொண்டால் அணுஆயுத ஒப்பத்தத்தில் இணைவதில் அமெரிக்கா தயாராக இருக்கிறது என்பதில் ஜோ பைடன் தெளிவாக இருக்கிறார். இதனை ஈரானுடனான எங்களது உறவை மேம்படுத்தும் வாய்ப்பாக இதனை கருதுவோம்’ என கூறினார்.

அமெரிக்கா உள்ளிட்ட 6 வளர்ந்த நாடுகளுக்கும் ஈரானுக்கும் இடையே கடந்த 2015ஆம் ஆண்டு அணுசக்தி ஒப்பந்தம் கையெழுத்தானது.

இதன்படி ஆக்கப்பூர்வ தேவைகளுக்கு யுரேனியம் செறிவூட்ட ஈரானுக்கு அனுமதி வழங்கப்பட்டது. எனினும் அந்நாடு எவ்வளவு யுரேனியம் இருப்பு வைத்துக் கொள்ளலாம், எந்த அளவுக்கு அதை செறிவூட்டலாம் என்ற வரம்பு விதிக்கப்பட்டது.

அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்ற பிறகு இந்த ஒப்பந்தத்தில் குறைபாடுகள் உள்ளதாக கூறி அதிலிருந்து விலகினார்.

மேலும், ஈரான் மீது மீண்டும் பொருளாதார தடைகளை விதித்து வந்தார். இதனால் ஆத்திரமடைந்த ஈரான், அணுசக்தி ஒப்பந்த விதிகளை அடுத்தடுத்து மீறியது.