அமெரிக்கா கைப்பற்றிய ரஷ்ய எண்ணெய் கப்பலில் இந்தியர்கள்!
|
அமெரிக்கா கைப்பற்றிய ரஷ்ய எண்ணெய் கப்பலில் 3 இந்தியர்கள் பணியாற்றியதாக தெரியவந்துள்ளது. அமெரிக்க கடற்படை, வெனிசுலாவுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் ரஷ்யக் கொடி ஏந்திய மரினேரா எண்ணெய் கப்பலை வட அட்லாண்டிக் கடலில் கைப்பற்றியுள்ளது. இந்தக் கப்பலில் மொத்தம் 28 பேர் பணியாற்றியுள்ளனர். இதில் 3 இந்தியர்கள் உள்ளனர். மற்றவர்கள், 17 உக்ரைன், 6 ஜார்ஜியா மற்றும் 2 ரஷ்ய நாட்டவர்கள் ஆவர். |
|
கப்பல் முதலில் ‘பெல்லா 1’ என அழைக்கப்பட்டது. பின்னர் பெயர் மற்றும் கொடியை மாற்றி, கயானா கொடி ஏந்தி பயணித்தது. அமெரிக்க கடற்படை மற்றும் கடலோர காவல்படை இணைந்து, பல நாட்கள் பின்தொடர்ந்து இந்தக் கப்பலை கைப்பற்றியது. அமெரிக்கா, வெனிசுலாவுடன் தொடர்புடைய தடைசெய்யப்பட்ட கப்பல்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுத்து வருகிறது. ‘பெல்லா 1’ கப்பல், தடையை மீறி வெனிசுலாவிற்கு சென்றதாக குற்றம் சாட்டப்பட்டது. கப்பல் பெயர், கொடி மாற்றி தப்பிக்க முயன்றாலும், அமெரிக்க கடற்படை பின்தொடர்ந்து கைப்பற்றியது. அமெரிக்காவின் இந்த நடவடிக்கையை எதிர்த்து, ரஷ்யா “இது கடற்கொள்ளைச் செயல்” எனக் கடுமையாக விமர்சித்துள்ளது. பதிலுக்கு, “தேசிய பாதுகாப்பு மற்றும் சட்ட அமலாக்கம்” காரணமாகவே நடவடிக்கை எடுத்ததாக அமெரிக்கா விளக்கம் அளித்துள்ளது. இதனிடையே, பிரித்தானிய பாதுகாப்பு துறை, அமெரிக்காவிற்கு இராணுவ ஆதரவு வழங்கியதாக உறுதிப்படுத்தியுள்ளது. இந்த சம்பவம், அமெரிக்கா-ரஷ்யா உறவுகளில் புதிய பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. கப்பலில் இருந்த இந்தியர்களின் நிலை குறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகவில்லை. |