ஜனாதிபதி பதவிக்கு பொருத்தமானவராக இருந்தார் சம்பந்தன்!

26.07.2025 09:27:50

காலஞ்சென்ற முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் இரா. சம்பந்தன், இந்த நாட்டின் ஜனாதிபதி மற்றும் பிரதமர் பதவிகளுக்கும் பொருத்தமானவராக இருந்தார் என்றும் அந்த அதிஷ்டம் நாட்டுக்கு கிடைக்காவிட்டாலும் அவரின் குணாம்சங்களை கொண்ட தலைவர்கள் அந்த பதவிகளுக்கு செல்ல வேண்டும் என்றும் சபை முதல்வரும் அமைச்சருமான பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.

காலஞ்சென்ற முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் இரர. சம்பந்தன் மீதான அனுதாபப் பிரேரணையில் உரையாற்றும் போதே சபை முதல்வர் இவ்வாறு கூறினார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கை அரசியல் வரலாற்றில் மறக்க முடியாத சிறந்தவொரு அரசியல்வாதியாக இரா.சம்பந்தன் இருந்தார். அவரின் மறைவு தொடர்பில் அவரின் குடும்பத்தினருக்கு எமது கவலைகளை தெரிவித்துக்கொள்கின்றேன்.

அவருடன் நான் 2001 முதல் 2010 வரையிலும் 2015 முதல் 2020 வரையிலும் எதிர்க்கட்சியில் இருந்துள்ளேன். அதன்போது எமது கொள்கைகள் எதுவாக இருந்தாலும் இந்த பாராளுமன்றத்தில் வேறு அரசியல்வாதிகளிடம் இருந்து மாறுபட்ட ஒருவராக இருந்தார்.

அவரின் அரசியல் கொள்கைகளில் நூறுவீதம் இணங்காதவர்களாக இருந்தாலும் நாங்கள் எப்போதும் மதிப்பளிக்கும் தலைவராக இருந்துள்ளார்.