ரணிலுக்காக ஒன்றிணையவில்லை!

27.08.2025 08:45:56

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை பாதுகாப்பதற்காக எதிர்க்கட்சிகள் அனைத்தும் தற்போது ஒன்றிணையவில்லை. ஜனநாயகத்தை பாதுகாப்பதற்காகவே ஒன்றிணைந்துள்ளோம். அரசாங்கத்தின் சர்வாதிகார போக்குக்கு எதிராக ஒட்டுமொத்த மக்களும் ஒன்றிணைய வேண்டும் என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் இந்திக அனுருத்த தெரிவித்தார்.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில் செவ்வாய்க்கிழமை (26) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சட்டவாட்சி மற்றும் ஜனநாயகத்தை முன்னிலைப்படுத்தி செயற்பட்டார்.வடக்கு மற்றும் கிழக்கு மாகாண மக்களுக்கு ஜனநாயக உரிமைகளை வழங்கினார். தேர்தலை நடத்தினார்.

எமது அரசாங்கம் ஜனநாயகம் மற்றும் சட்டவாட்சி கோட்பாட்டை முன்னிலைப்படுததியே செயற்பட்டோம். ஜனநாயகம் என்றால் என்னவென்று மக்கள் விடுதலை முன்னணிக்கு பாடம் கற்பிக்க வேண்டும்.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை பாதுகாப்பதற்காக எதிர்க்கட்சிகள் அனைத்தும் தற்போது ஒன்றிணையவில்லை. ஜனநாயகத்தை பாதுகாப்பதற்காகவே ஒன்றிணைந்துள்ளோம். நிறைவேற்று அதிகாரமிக்க முன்னாள் ஜனாதிபதி ஒருவர் அரசியல் பழிவாங்களுக்கு உட்படுத்தப்பட்டுள்ளமை இதுவே முதன்முறையாகும்.

சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்று குறிப்பிட்டுக் கொண்டு அரசாங்கம் அரசியலமைப்புடனான சர்வாதிகாரத்தை செயற்படுத்துகிறது.

இந்த அரசாங்கத்தின் அமைச்சர்கள் பிரதி அமைச்சர்கள் மீது பல குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.இதுவரையில் இந்த குற்றச்சாட்டுக்கள் ஏதும் விசாரிக்கப்படவில்லை.இதுவா சட்டத்தின் முன் அனைவரும் சமம். அரசாங்கத்தின் சர்வாதிகார போக்குக்கு எதிராக ஒட்டுமொத்த மக்களும் ஒன்றிணைய வேண்டும் என்றார்.