நாம் தமிழர் கட்சியில் வெடித்த மோதல்!

26.08.2026 08:47:29

தமிழ்நாடு சட்டசபை தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, நாம் தமிழர் கட்சிக்குள் உட்கட்சிப் பூசல் மற்றும் நிர்வாகக் குழப்பங்கள் வெடிக்கத் தொடங்கியுள்ளன. கட்சியின் உள்கட்டமைப்பில் இருக்கும் குறைபாடுகளைச் சரிசெய்யாமல், தேர்தல் தோல்விக்குத் தமிழக வெற்றிக் கழகமே காரணம் என்று தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசி வருவது மூத்த நிர்வாகிகள் பலருக்கும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. 20-க்கும் மேற்பட்ட பாசறைகளும் குழப்பங்களும் நாம் தமிழர் கட்சியில் இளைஞர் பாசறை, மகளிர் பாசறை, சுற்றுச்சூழல் பாசறை என 20-க்கும் மேற்பட்ட துணை அமைப்புகள் செயல்பட்டு வருகின்றன.

    

 

கட்சி பெரிதாக வளர்ந்திருப்பது போலத் தெரிந்தாலும், களத்தில் சரியான நிர்வாகமும் வழிகாட்டுதலும் இல்லை என்று நிர்வாகிகள் கூறுகின்றனர். ஒவ்வொரு பாசறைக்கும் பல தலைமை ஒருங்கிணைப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். ஆனால் யாருக்கு என்ன வேலை, யாருக்கு என்ன அதிகாரம் என்ற தெளிவான வரையறை இல்லை. இதனால், சரியான வழிகாட்டுதல் இல்லாததால் இந்த பாசறைகள் அனைத்தும் சரியான கேப்டன் இல்லாத கிரிக்கெட் டீம் போலத் திசையற்றுப் போயுள்ளதாக மூத்த நிர்வாகிகள் வேதனை தெரிவிக்கின்றனர். அதிகாரம் இல்லாத முக்கியப் பொறுப்புகள் கட்சியில் பொதுச்செயலாளர், பொருளாளர், செயற்குழு உறுப்பினர்கள், கொள்கை பரப்புச் செயலாளர்கள் போன்ற முக்கியப் பதவிகள் பெயரளவில் மட்டுமே இருப்பதாகக் கூறப்படுகிறது.

இந்தப் பொறுப்புகளில் இருப்பவர்களுக்கு எந்தவித முடிவெடுக்கும் அதிகாரமும் வழங்கப்படவில்லை. அனைத்து முக்கிய முடிவுகளும் ஒருசிலரால் மட்டுமே எடுக்கப்படுவதால், கீழ்மட்டத்தில் உள்ள தொண்டர்களுடன் தொடர்பு குறைந்துபோனது. களத்தில் பணிகளைச் செய்வதிலும், தேர்தலைத் திட்டமிட்டு எதிர்கொள்வதிலும் இது பெரிய முட்டுக்கட்டையாக மாறியது. தோல்விக்கு யார் காரணம்? கட்சியின் இந்த நிர்வாகக் குறைபாடுகளும், சரியான திட்டமிடல் இல்லாததுமே தேர்தல் பின்னடைவுக்கு முக்கியக் காரணமாக அமைந்தது என்று நிர்வாகிகள் சுட்டிக்காட்டுகின்றனர். வாக்குச்சாவடி அளவில் வலுவான கட்டமைப்பு இல்லாததும் தோல்விக்கு வழிவகுத்தது.

ஆனால், இந்த உட்கட்சி பலவீனங்களைப் பற்றிப் பேசாமல், தேர்தல் தோல்விக்குத் தமிழக வெற்றிக் கழகத்தின் வருகைதான் காரணம் என்று சீமான் தொடர்ந்து குற்றம்சாட்டி வருவது தொண்டர்களிடையே சலிப்பை உண்டாக்கியுள்ளது. கட்சியைச் சீரமைக்காமல் மற்றவர்கள் மீது பழியைப் போடுவது பலன் தராது என்பது அவர்களின் வாதமாக உள்ளது. தேர்தல் தோல்விக்குப் பிறகு சீமான் வழக்கமான செய்தியாளர் சந்திப்புகளைத் தவிர்த்து தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. தற்போதைய சூழலில் பழைய பாணியை மாற்றிக் கொண்டு, புதிய வியூகங்களை வகுக்காவிட்டால் நாம் தமிழர் கட்சி தனது எஞ்சிய தனித்துவத்தையும் இழக்கும் அபாயம் உள்ளது.

தமிழக அரசியல் வரலாற்றில் பல கட்சிகள் காலத்தால் மறைந்திருப்பதைப் போல, நாம் தமிழரும் ஒரு தேக்க நிலையைச் சந்திக்குமா? அல்லது சீமான் மீண்டும் பீனிக்ஸ் பறவையாக எழுந்து வருவாரா? என்பதை அவரது அடுத்தகட்ட நகர்வுகளே தீர்மானிக்கும். இனி யாருக்கு அரசியல் செய்யணும் என்ற கோபத்திலும் அவர் இருப்பதாக கூறப்படுகிறது. தவெக அரசுக்கு வேல்முருகன், சீமான் கண்டனம்! மேடைப் பேச்சுகளும் உணர்ச்சிமிகு முழக்கங்களும் மட்டும் தேர்தலை வெல்லப் போதாது என்பதை இந்தத் தேர்தல் முடிவுகள் தெளிவாகச் சுட்டிக்காட்டுகின்றன.

பூத் கமிட்டி அமைப்பது, அடிமட்டக் கட்டமைப்பை வலுப்படுத்துவது, தொகுதி வாரியாக உள்ளூர் பிரச்சனைகளைத் தீர்ப்பது போன்ற களப்பணிகளில் நாம் தமிழர் தோற்றுவிட்டதாகக் கட்சியினரே ஒப்புக்கொள்கின்றனர். அடுத்தகட்ட சவால்: மேடைப் பேச்சுகள் மற்றும் இணையப் பிரச்சாரங்கள் மட்டுமே தேர்தல் வெற்றிக்கு உதவாது என்பதை உணர்ந்து, கட்சியின் அடிப்படை நிர்வாகத்தை மாற்றியமைக்க வேண்டும் என்ற குரல் நாதகவுக்குள் ஓங்கி ஒலிக்கத் தொடங்கியுள்ளது. இந்த உள்கட்சி அதிருப்திகளைத் தலைமை எவ்வாறு சரிசெய்யப் போகிறது என்பதில்தான் கட்சியின் எதிர்காலம் அடங்கியுள்ளது.