
தனிமனித பாதுகாப்பை உறுதிப்படுத்துவதில் அரசாங்கம் தோல்வி!
இந்தியாவுடன் கைச்சாத்திடப்பட்டுள்ள பாதுகாப்பு புரிந்துணர்வு ஒப்பந்தத்தால் பாகிஸ்தான், சீனா உள்ளிட்ட நாடுகள் இலங்கைக்கு புலனாய்வு தகவல்களை வழங்குவதை தவிர்க்கின்றன. தனிமனித பாதுகாப்பை உறுதிப்படுத்துவதில் அரசாங்கம் தோல்வியடைந்துள்ளது. தேசிய பாதுகாப்பு தொடர்பில் அரசாங்கத்துக்கு கற்பிக்க தயாராகவுள்ளோம் என்று முன்னாள் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்தார். |
கொழும்பில் ஞாயிற்றுக்கிழமை (6) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது, தேசிய பாதுகாப்பு தொடர்பில் எதிர்க்கட்சிகளின் உறுப்பினர்களுக்கு வகுப்பறையில் அமர வைத்து கற்பிப்பதாக குறிப்பிட்ட அரசாங்கத்துக்கு தேசிய பாதுகாப்பு தொடர்பில் நிற்க வைத்து கற்பிக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது. பாதாளக் குழுக்களுக்கும், போதைப்பொருள் வியாபாரிகளுக்கும் இடையில் முரண்பாடு அதன் விளைவாகவே துப்பாக்கிச்சூட்டு சம்பவங்கள் இடம்பெறுதாக அரசாங்கம் பொறுப்பற்ற வகையில் குறிப்பிட முடியாது. பாதாள குழுக்களின் செயற்பாடுகளினால் பொதுமக்களின் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்தவும், பாதாள குழுக்களின் செயற்பாடுகளை கட்டுப்படுத்தவும் அரசாங்கம் குறிப்பாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் எவ்வித நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை. தேசிய பாதுகாப்பு தொடர்பில் அனுபவமுள்ளவர்களை பாதுகாப்பு தொடர்பான விடயதானங்களுக்கு ஜனாதிபதி நியமித்திருக்க வேண்டும். அரசாங்கம் இந்தியாவுடன் அண்மையில் பாதுகாப்பு தொடர்பான புரிந்துணர்வு தொடர்பில் பல சர்ச்சைகள் எழுந்துள்ள நிலையில் அரசாங்கம் இதுவரையில் அந்த ஒப்பந்தத்தின் உள்ளடக்கத்தை வெளிப்படுத்தவில்லை.இந்த பாதுகாப்பு ஒப்பந்தத்தால் பாகிஸ்தான், சீனா உள்ளிட்ட நாடுகள் இலங்கைக்கு புலனாய்வு தகவல்களை வழங்குவதை தவிர்க்கின்றன. தேசிய பாதுகாப்பபை உறுதிப்படுத்த அரசாங்கம் சகல அயல் நாடுகளுடன் இணக்கமாக செயற்பட வேண்டும்.இந்தியாவுக்கு மாத்திரம் சார்பாக செயற்பட்டுக் கொண்டு ஏனைய நாடுகளை பகைத்துக் கொள்ள கூடாது.இந்த அரசாங்கம் இந்தியாவை மாத்திரம் முன்னிலைப்படுத்தி செயற்படுகிறது என்றார். |