இந்தோனேஷியாவில் எச்சரிக்கை நிலை!

18.06.2025 08:11:16

இந்தோனேசியாவின் மிகவும் செயல்திறன் மிக்க எரிமலைகளில் ஒன்று செவ்வாய்க்கிழமை (17) வெடித்ததுடன் வானத்தில் 11 கிலோ மீட்டருக்கும் அதிகமான உயரத்திற்கு ஒரு பெரிய சாம்பல் மேகத்தை உமிழ்ந்தது.

இதனால், நாட்டின் மிக உயர்ந்த எச்சரிக்கையை இந்தோனேஷிய அதிகாரிகள் வெளியிட்டனர்.

அந்நாட்டு நேரப்படி செவ்வாய்க்கிழமை மாலை 5:35 மணிக்கு (BST 10:35 BST) மவுண்ட் லெவோடோபி லக்கி-லக்கி (Mount Lewotobi Laki-Laki)என்ற எரிமலை வெடித்ததாக நாட்டின் எரிமலையியல் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக சுற்றுலாத் தீவான புளோரஸுக்கு மேலே பரந்த மேகம் பரவியுள்ளது.

இது 1,584 மீ (ஒரு மைல்) உயரமுள்ள இரட்டை சிகரங்களைக் கொண்ட எரிமலை ஆகும்.

அனர்த்தத்தினால் ஏற்பட்ட சேதம் அல்லது உயிரிழப்புகள் குறித்த உடனடி தகவல்கள் எதுவும் இல்லை.

எனினும், எரிமலை வெடிப்பானது குறித்த பகுதிக்கான விமான சேவைகளை இரத்து செய்தது.

அதேநேரம், வெடிப்பு ஏற்பட்டதிலிருந்து 7 கி.மீ. சுற்றளவில் யாரும் எந்த நடவடிக்கைகளையும் மேற்கொள்ளக்கூடாது என்று அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

எரிமலை சாம்பலில் இருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள முகக்கவசங்களை அணியுமாறு குடியிருப்பாளர்கள் வலியுறுத்தப்பட்டனர்.

இதற்கிடையில், தேசிய பேரிடர் தணிப்பு நிறுவனம், குறைந்தபட்சம் ஒரு கிராமமாவது வெளியேற்றப்பட்டுள்ளதாகவும், எரிமலையை சூழவுள்ள மண்டலத்திற்கு வெளியே பல இடங்களில் சாம்பல் மழை பெய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

லெவோடோபி லக்கி-லகியின் கடைசி வெடிப்பு மே மாதத்தில் நிகழ்ந்தது.

அப்போது அதிகாரிகள் எச்சரிக்கை மட்டத்தை மிகக் கடுமையானதாக உயர்த்தியமையும் குறிப்பிடத்தக்கது.