
நீதிமன்றத்தில் Zoom மூலம் முன்னிலையாவுள்ள ரணில்.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை (Ranil Wickremesinghe) அவரது உடல்நிலை காரணமாக நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த முடியாது என்று கொழும்பு தேசிய வைத்தியசாலையின் விசேட வைத்தியர்கள் குழு தெரிவித்துள்ளது.
அதன்படி, நீதிமன்றம் தெரிவித்தால், இன்று (26) நடைபெறும் நடவடிக்கைகளில் அவரை zoom மூலம் இணைக்க சிறைச்சாலைகள் துறை திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த 22 ஆம் திகதி கைது செய்யப்பட்டு இன்று வரை தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள ரணில் விக்ரமசிங்க, உடல்நலக் குறைவு காரணமாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பலப்படுத்தப்பட்டுள்ள பாதுகாப்பு
பொது நிதியை முறைகேடாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட ரணில் விக்ரமசிங்க மீதான வழக்கு இன்று (26) கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.
இந்த நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகள், கோட்டை நீதவான் நீதிமன்ற வளாகத்தைச் சுற்றிய பகுதிகளில் இன்று (26) காலை முதல் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.