கோயம்புத்தூர் தொகுதியை பாஜகவுக்கு விட்டு தருவாரா எடப்பாடி?
|
பாஜக தேசிய செயல் தலைவராக சமீபத்தில் பொறுப்பேற்ற நிதின் நபீன், இரண்டு நாள் பயணமாக தமிழ்நாட்டிற்கு வருவதால் மாநில அரசியல் வட்டாரங்களில் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தொகுதி பங்கீடு குறித்தபேச்சுவார்த்தை அதிமுக-பாஜகவுக்குள் இன்னும் எட்டப்படவில்லை என்று சொல்லப்படும் நிலையில், பாஜக செயல் தலைவரின் வருகை முக்கியத்துவம் பெற்றுள்ளது. கடந்த முறை 20 தொகுதிகளில் போட்டியிட்ட பாஜக 4 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. ஆனால், இந்த முறை 56 தொகுதிகள் கேட்பது மட்டும் அல்லாமல், ஆட்சியிலும் பாஜக பங்கு கேட்பதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகிய வண்ணம் உள்ளன. |
|
நேற்றைய தினம் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் எடப்பாடி பழனிசாமியை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார்.. தொகுதி விவகாரம், சீட் எண்ணிக்கை உள்ளிட்ட விவகாரங்கள் அப்போது இரு தரப்பிலும் பேசப்பட்டதாக தெரிகிறது.. பிறகு செய்தியாளர்களிடம் பேசிய நயினார் நாகேந்திரன், பிரதமர் மோடி இந்த மாதம் இறுதியில் தமிழகம் வருகிறார். சென்னை அல்லது மதுரையில் பொதுக்கூட்டம் நடைபெறும். தேதி இன்னும் முடிவாகவில்லை. தொகுதி பங்கீடு குறித்து அதிமுகவுடன் நடந்த பேச்சு வார்த்தை சுமூகமாக முடிவடைந்துள்ளது. பாஜக எத்தனை தொகுதிகளில் போட்டி என்பதை பின்னர் கூறுகிறேன் என்றார்.. பாமக அன்புமணி ராமதாஸ் 3 நாட்களுக்கு முன்பு செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, மேலும் சில கட்சிகள் கூட்டணியில் இணையலாம் என்று கூறியிருந்தார். ஏற்கனவே எடப்பாடி பழனிசாமியை சந்தித்து கூட்டணி பேச்சுவார்த்தையை துவங்கிவிட்ட நிலையில் அமமுக டிடிவி தினகரனும் தேசிய கூட்டணிக்குள் வர உள்ளதாகவே தெரிகிறது. எனினும் இவர்களை தவிர வேறு யாராவது கட்சியில் இணையக்கூடும் என்கிறார்கள். குறிப்பாக ஓபிஎஸ் அணியிடமும் பேச்சுவார்த்தை நடப்பதாக தெரிகிறது. இந்த பரபரப்பான சூழலில்தான் பாஜக தேசிய செயல் தலைவர் நிதின் நபின், இன்று சனிக்கிழமை தமிழகம் வருகிறார். தேசிய பொறுப்பை ஏற்ற பிறகு, புதுச்சேரி செல்லும் வழியில் கடந்த மாதம் தமிழகம் வந்த அவர், தற்போது இரண்டாவது முறையாக நேரடியாக தமிழ்நாடு பயணமாக சென்னைக்கு வருவது அரசியல் முக்கியத்துவத்தை பெற்று வருகிறது. கோவையில் நடைபெறவுள்ள முக்கிய கட்சி நிகழ்ச்சிகள் மற்றும் ஆலோசனைக் கூட்டங்களில் பங்கேற்பதற்காக நிதின் நபீன் வருகிறார். இன்று மாலை கோவை விமான நிலையம் வந்தடையும் அவருக்கு பாஜக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளிக்கத் திட்டமிட்டுள்ளனர். 2 நாள் கோயம்புத்தூர் கோவையில் இரண்டு நாட்கள் தங்கும் அவர், கட்சியின் தேர்தல் பணிகள் குறித்து தீவிர ஆலோசனைகளில் ஈடுபட உள்ளார். கோவையில் உள்ள SNR ஆடிட்டோரியத்தில் பாஜக தொழில் பிரிவு சார்பில் நடைபெறவுள்ள நிகழ்ச்சியில் நிதின் நபீன் கலந்து கொள்கிறார். இந்த நிகழ்ச்சிக்கு பிறகு மாநில மற்றும் மாவட்ட அளவிலான முக்கிய நிர்வாகிகளுடன் தனிப்பட்ட ஆலோசனைகள் நடைபெறும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழகத்தில் பாஜக அமைப்பை கிளை அளவிலிருந்து வலுப்படுத்துவது, வரவிருக்கும் சட்டப்பேரவை தேர்தலுக்கான முன்னேற்பாடுகள் உள்ளிட்ட விஷயங்கள் இந்த சந்திப்புகளில் முக்கிய இடம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. பாஜக தலைவர்கள் நாளை அதாவது ஞாயிற்றுக்கிழமை, கோவையில் பாஜக மாநில மையக்குழு கூட்டம் நடைபெற உள்ளது. இதில் தமிழகத்தின் தற்போதைய அரசியல் சூழல், வேட்பாளர் தேர்வுக்கான ஆரம்பகட்ட விவாதங்கள், தொகுதி பங்கீடு, தேர்தல் வியூகம் போன்றவை குறித்து விரிவாக பேசப்பட உள்ளது. மேலும், அதிமுக - பாஜக - பாமக கூட்டணியின் தற்போதைய நிலை, அதன் பலம் மற்றும் அடுத்தகட்ட அரசியல் நகர்வுகள் குறித்தும் ஆலோசனை நடைபெறும் என கூறப்படுகிறது. இந்த கூட்டத்தில் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், முன்னாள் தலைவர் அண்ணாமலை, வானதி சீனிவாசன் எம்எல்ஏ உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பங்கேற்க உள்ளனர். இதனுடன், கூட்டணி அரசியல் தொடர்பாகவும் நிதின் நபீன் முக்கிய சந்திப்புகளை நடத்த வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதிமுக கூட்டணியில் தற்போது பாமக இணைந்துள்ள நிலையில், மேலும் சில கட்சிகளை கூட்டணிக்குள் கொண்டு வருவது குறித்து கூட்டணி தலைவர்களுடன் அவர் ஆலோசனை நடத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. கோயம்புத்தூரை விட்டு தருமா அதிமுக அதேபோல தொகுதி விவகாரங்கள் குறித்தும் பேச்சு நடத்தப்படும் என தெரிகிறது.. குறிப்பாக தங்களுக்கு கூடுதல் செல்வாக்குள்ள கோவையை தொகுதியை பாஜகவினர் கேட்டு வருவதாகவும், அதற்கு அதிமுக மறுப்பு சொல்வதாகவும் உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் கசிந்து கொண்டிருக்கின்றன. அதாவது கொங்கு மண்டலத்தில் பாஜக வலுவாக உள்ளதால் அங்கு தொகுதிகள் ஒதுக்க வேண்டும், தோவை தெற்கு சிங்காநல்லூர், மேட்டுப்பாளையம், திருப்பூர், பல்லடம் ,பொள்ளாச்சி உட்பட தொகுதிகளில் பாஜக போட்டியிட நினைக்கிறதாம்.. ஆனால் இதற்கு எந்த பதிலும் இதுவரை எடப்பாடி பழனிசாமி சொல்லவில்லையாம்.. தற்போது 2 நாட்கள் கோவையிலேயே நிதின் நபீன் தங்குவதால், இதுகுறித்த பேச்சும் கூட்டணிக்குள் எழலாம் என்கிறார்கள். தேசிய தலைவர்கள் வருகை தேசிய தலைவர்கள் தொடர்ச்சியாக தமிழ்நாட்டிற்கு வருவதால் மாநில அரசியல் களம் சூடுபிடித்து வரும் நிலையில், நிதின் நபீனின் இந்த இரண்டு நாள் பயணம் பாஜக தொண்டர்களிடையே மட்டுமின்றி அரசியல் வட்டாரங்களிலும் அதிக கவனத்தை ஈர்த்துள்ளது. அதுமட்டுமல்ல, இந்த மாத இறுதியில் பிரதமர் மோடியும் தமிழ்நாட்டிற்கு வர உள்ளதாக தகவல்கள் வெளியாகியிருப்பதால், தமிழகத்தில் பாஜகவின் அரசியல் செயல்பாடுகள் வருங்காலங்களில் மேலும் தீவிரமடையும் என அரசியல் பார்வையாளர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். |