கொரோனா மரணங்களில் சந்தேகம்!

01.08.2022 10:34:21

கொரோனா நோய்த் தொற்று குறித்த புள்ளி விபரங்கள் யதார்தத்திற்கு புறம்பானது என அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் மருத்துவர் ஹரித அலுத்கே குற்றம் சுமத்தியுள்ளார்.

நேற்றைய தினம் (31) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

நாளாந்த கொரோனா தொற்று உறுதியானவர்கள் எண்ணிக்கை மற்றும் கொரோனா மரணங்கள் தொடர்பிலான புள்ளி விபரங்கள் சந்தேகத்தை ஏற்படுத்தும் வகையிலானது என தெரிவித்துள்ளார்.

தரவுகளில்  சந்தேகம்

அத்துடன், அண்மைய காலங்களில் கொரோனா மரணங்கள் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்துச் செல்லும் பாங்கு சந்தேகத்தை ஏற்படுத்தும் வகையிலானது என சுட்டிக்காட்டியுள்ளார்.

நாளாந்த தொற்று உறுதியாளர் எண்ணிக்கைக்கும் நாளாந்த மரணங்களின் எண்ணிக்கைக்கும் இடையில் முரண்பாடு காணப்படுவதாகவும் நாளாந்த தொற்று உறுதியாளர் எண்ணிக்கை 100 முதல் 150 ஆக குறிப்பிடப்பட்ட போதிலும் உண்மையான எண்ணிக்கை இதனை விடவும் வெகுவாக அதிகமானதாகவே இருக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, புதிய திரிபுகள் உலகம் முழுவதிலும் பரவி வருவதாகத் ஹரித அலுத்கே எச்சரித்துள்ளார்.