“தவெக வம்பிழுத்தால் என் பதிலடி வேற மாதிரி இருக்கும்”.

05.02.2026 14:25:03

தவெகவோ அல்லது விஜய்யோ அக்கட்சியில் இருக்கும் அல்லு சில்லுகளை வைத்துக்கொண்டு வம்பிழுத்தால் என்னுடைய பதிலும் மிக கடுமையாக இருக்கும்" என பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை எச்சரிக்கை விடுத்துள்ளார். தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்து பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், "விஜய்யையும் தவெகவினரையும் நான் இன்னும் அடிக்க ஆரம்பிக்கவில்லை. ஏனென்றால், தமிழ்நாடு அரசியலில் என்னுடைய பேச்சை மாற்றிப் பேசும் ஆள் நான் இல்லை. விஜய் பற்றி முதல் நாள் சொன்ன கருத்தைத்தான் இன்றும் சொல்கிறேன்.

அரசியலுக்கு புதியவர்கள் வரவேண்டும். எங்களோடு கூட்டணிக்கு வரவில்லை என்பதற்காக நான் மாற்றி எல்லாம் பேச மாட்டேன். அவருடைய பாதையில் அவர் போகட்டும். Also Read "அண்ணாமலை, டிடிவி விலகல்.. திமுகவிற்கு சாதகமாகிறதா களம்? என்டிஏ கூட்டணியில் நடப்பது என்ன?" அதே நேரத்தில் 'இந்த டப்பா என்ஜின்' என்பதற்கு பதிலடியை நான் கொடுத்துவிட்டேன். அதே நேரத்தில் தவெகவோ, விஜய்யோ கட்சியில் இருக்கும் அல்லு சில்லுகளை வைத்து வம்பு இழுத்தார் என்றால், என்னுடைய பதிலும் கடுமையாக இருக்கும்.

அதே அளவுக்கு நானும் போவேன். நாகரீகமான அரசியல் என்று விஜய் சொன்னதால் என்னுடைய பதிலும் நாகரீகமாக உள்ளது. இரண்டாம் கட்ட தலைவர்கள், நான்கு கட்சி மாறி வந்தவர்களை வைத்துக்கொண்டு தரம் தாழ்ந்து விமர்சித்தால், அதே பாணியில் அதைவிட சிறப்பாக எனக்கு பதில் சொல்லத் தெரியும். ஆனால் அது வேண்டாம் என்று நான் நினைக்கிறேன். அரசியல் களம் நாகரீகமாக இருக்கட்டும். அவருடைய பாதையில் அவர் போகட்டும். விஜய் தனது கட்சிக்குள் தனக்கான ஒரு பிம்பத்தை உருவாக்கிக் கொள்ளலாம், அது அவருடைய விருப்பம்.

ஆனால், தமிழகத்தில் தற்போதைய முதலமைச்சர் யார், எதிர்க்கட்சித் தலைவர் யார், உண்மையான தேர்தல் களம் எப்படி இருக்கிறது என்பது தமிழக மக்கள் அனைவருக்கும் நன்றாகவே தெரியும். ஏற்கனவே நான் சொன்னது போல, தமிழக வாக்காளர்கள் ஏப்ரல் மாதத்தில் வரும் தேர்தலில் அவர்களுடைய எண்ணங்களில் இருப்பதை பிரதிபலிப்பார்கள். அதுவரை காத்திருப்போம். தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற வேண்டும் என்பதற்காக கடுமையாக உழைத்துக் கொண்டிருக்கிறோம். தவெகவினர் இதை ஒரு எச்சரிக்கையாக கூட எடுத்துக் கொள்ளட்டும்.

விஜய்யின் உரை என்பது அந்த அரங்கிற்குள் இருந்த தொண்டர்களின் கைதட்டலுக்காகவும் விசில் சத்தத்திற்காகவும் மட்டுமே அமைந்திருந்தது. விஜய்யின் பேச்சு ஆழமாக, ஒரு சிந்திக்க வைக்கக்கூடிய, எதற்காக அவருக்கு ஓட்டுப்போட வேண்டும். எதற்கு மாற்றம் வேண்டும் என்பதை தெளிவுப்படுத்தும் விதமாக இல்லை. தமிழ்நாட்டில் முதலமைச்சர் யார், எதிர்க்கட்சித் தலைவர் யார் தேர்தல் களம் எப்படி இருக்கிறது என தமிழ்நாட்டு மக்களுக்கு தெரியும். அதனால் அவரது பேச்சை கடந்து போய்விட வேண்டும்." என்று தெரிவித்துள்ளார்.

முன்னதாக தமிழக வெற்றிக் கழகம் துவங்கப்பட்டு 2 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள சூழலில், 3 ஆம் ஆண்டு தொடக்க விழா சென்னை பனையூரில் உள்ள அக்கட்சியின் தலைமை நிலையத்தில் கடந்த 2 ஆம் தேதி நடைபெற்றது. இதில் பேசிய விஜய், மும்முனைப் போட்டி, நான்கு முனைப் போட்டி என்று சொல்கிறார்கள். நாம் ஒருபக்கம், மற்றொரு பக்கம் தி.மு.க கூட்டணி , இன்னொரு பக்கம் பா.ஜ.க தலைமையில் மற்றும் பலர். எத்தனை பேர் வந்தாலும் திமுகவை வீழ்த்த மாபெரும் மக்கள் சக்தியான நம்மால் மட்டும்தான் முடியும் என்று கூறியிருந்தார்.

மேலும், "நான் ஓவர் கான்ஃபிடென்சில் பேசுகிறேன் என்று நினைக்காதீங்க. கள நிலவரம், கள யதார்த்தமும் இதுதான். தீயசக்தியை வீழ்த்துவதற்கு தூய சக்தியான நம்மால் தான் முடியும். 2026 தேர்தலில் மக்களுக்கு ஒரே ஆப்ஷன் தவெக தான். இந்த டப்பா இன்ஜின், ஓட்டை இன்ஜின், எவ்வளவு இன்ஜின் வந்தாலும், டாப் இன்ஜின் நம்ம தவெக தான் என்பதை மக்கள் முடிவு செய்துவிட்டனர்." எனப் பேசி இருந்தார்.

விஜய் பேச்சுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் தமிழக பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை அளித்த பேட்டியில், "தவெக தலைவர் விஜய்யை பொறுத்தவரை, அவரிடம் என்ஜின் இருப்பதாக தெரியவில்லை. எங்களிடம் டபுள் என்ஜின் இருக்கிறது. அவரது என்ஜினில் ஆயில் இல்லை, வண்டி இல்லை, சேஸ் இல்லை, பெட்ரோல் இல்லை, டீசல் இல்லை, அதை ஸ்டார்ட் செய்வதற்கு ஆட்கள் இல்லை. இவர்கள் பாஜவை பார்த்து டப்பா இன்ஜின் என்று கூறுகிறார்கள்." எனக் கூறி இருந்தார். அண்ணாமலை, தவெக தலைவர் விஜய்யை கடுமையாக விமர்சித்ததால், தவெக கட்சியினர் சமூக வலைதளங்களில் அண்ணாமலையை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இந்தச் சூழலில் தான், "விஜய் தவெகவில் இருக்கும் அல்லு சில்லுகளை வைத்துக்கொண்டு வம்பிழுத்தால் என்னுடைய பதிலும் மிக கடுமையாக இருக்கும்" என்று அண்ணாமலை காட்டமாகக் கூறியுள்ளார்.