பலவீனமாக எதிர்க்கட்சிகள்..!
நாடாளுமன்ற ஜனநாயகத்தில் எதிர்க்கட்சியின் செயற்பாடுகள் மிக முக்கியம், ஆனால் இன்று எதிர்க்கட்சி பலவீனமாகவே உள்ளது என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
நாட்டின் தற்போதைய மற்றும் எதிர்கால அரசியல் போக்கு குறித்த கலந்துரையாடல் ஒன்றின் போதே ரணில் விக்ரமசிங்க மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், “ஜனநாயக நாட்டுக்கு எதிர்க்கட்சியின் செயல்திறன் மிகவும் முக்கியமானது.
தனிநபர்களை சுற்றியே அரசியல்
ஆனால் எதிர்காலத்தில் கட்சி அரசியல் தோல்வியடைந்து தனிநபர்களை சுற்றியே அரசியல் தீர்மானிக்கப்படும்.
இருப்பினும் நாடாளுமன்ற ஜனநாயகத்தில் எதிர்க்கட்சியின் செயற்பாடுகள் மிக முக்கியம் என்பதை உணர வேண்டும். ஆனால், இன்று எதிர்க்கட்சி பலவீனமாக உள்ளது.
எதிர்க்கட்சியாக பரந்துபட்டு செயற்படாமல் சில நபர்கள் மட்டுமே எதிர்க்கட்சியாகச் செயற்படுகின்றனர். உதாரணமாக சாமர சம்பத், தயாசிறி ஜயசேகர போன்றவர்கள் உள்ளனர்.
உத்தேச பொதுக் கூட்டணியின் தலைமைத்துவத்தை ஐக்கிய மக்கள் சக்தி பெற்றுக்கொள்ள முயற்சிக்கின்றது. இதற்கு நான் இணங்க மாட்டேன் என்று கருதுகின்றனர். அவ்வாறில்லை.
பிளவுபட்டுள்ள ஐக்கிய தேசிய கட்சி
ஆவர்களின் கோரிக்கையை நான் ஏற்றுக் கொண்டால் கூட்டணியின் எதிர்காலம் குறித்து ஐக்கிய மக்கள் சக்தியின் திட்டம் என்ன என்ற கேள்வி உள்ளது.
பிளவுபட்டுள்ள ஐக்கிய தேசிய கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி ஆகிய இரு கட்சிகள் மட்டுமல்லாமல் அனைத்து கட்சிகளும் அரசியல் நிலப்பரப்பில் மறைந்து போகலாம்.
இலங்கையில் மட்டுமல்ல முழு உலகிலும் ‘தனிநபரை சார்ந்த அரசியல் உருவாகி வருகிறது.
உலகெங்கிலும் கட்சிக் கட்டமைப்புகளை விடஇ தனிநபர்களின் ஆளுமை மற்றும் செல்வாக்கைச் சுற்றியே அரசியல் முடிவுகள் எடுக்கப்படும் ஒரு காலகட்டம் வரும் என்றார்.