ரஷ்யா மீது உக்ரேன் ட்ரோன் தாக்குதல்!

07.05.2025 07:52:15

ரஷ்யா மீது உக்ரேன் நடத்தியுள்ள ட்ரோன் தாக்குதலைத் தொடர்ந்து ரஷ்யாவில் விமான சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இரண்டாம் உலகப் போரில் சோவியத் யூனியன் மற்றும் அதன் நட்பு நாடுகளின் வெற்றியின் 80வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில், அதன் கொண்டாட்டங்கள் ரஷ்யாவின் மாஸ்கோவில் 8ஆம் திகதி முதல் நடைபெற உள்ளன. இதையடுத்து, உக்ரேனுடனான போரில் மூன்று நாள் போர் நிறுத்தத்தை ரஷ்ய ஜனாதிபதி புடின் அறிவித்திருந்தார்.

இப் போர்நிறுத்தம் மே 8ஆம் திகதி தொடக்கத்தில் இருந்து மே 10ஆம் திகதி இறுதி வரை, அதாவது 72 மணி நேரம் நீடிக்கும் என ரஷ்ய ஜனாதிபதி மாளிகை தெரிவித்திருந்தது. மேலும் இந்த போர் நிறுத்தத்தை ஏற்கும்படி உக்ரேனுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. ஆனால் இந்த போர் நிறுத்தத்தை உக்ரேன் ஜனாதிபதி  செலன்ஸ்கி ஏற்க மறுத்த நிலையில், அந்நாடு தற்போது ரஷ்யா மீது ட்ரோன் தாக்குதலை நடத்தியுள்ளது.

 

இந்த நிலையில், கடந்த இரண்டு நாட்களாக ரஷ்யாவின் பல்வேறு நகரங்களின் மீது உக்ரேன் நடத்திய   ட்ரோன்கள் தாக்குதல் காரணமாக  ரஷ்ய தலைநகர் மாஸ்கோவிலுள்ள 4 விமான நிலையங்களிலும் விமானச் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக அந்நாட்டுப் பாதுகாப்புத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதனால், இருநாடுகளின் எல்லையிலுள்ள பகுதிகள் மற்றும் ரஷ்யாவின் மத்தியப் பகுதிகளிலும் உள்ள விமான நிலையங்களில் விமானப் போக்குவரத்து தற்காலிகமாகத் துண்டிக்கப்பட்டுள்ளது. இந்தத் தாக்குதல்களினால் ரஷ்யாவின் குர்ஸ்க் மாகாணத்தில் 2 பேர் படுகாயமடைந்து உள்ளதாகவும், வோரோனெஸ் மாகாணத்தின் சில பகுதிகள் கடுமையான பாதிப்புக்குள்ளாகியதாகவும் கூறப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

நேட்டோ அமைப்பு நாடுகளில் உக்ரேன் இணையக்கூடாது என்பதற்காக,அதன் அண்டை நாடான ரஷ்யா, கடந்த 2022ஆம் ஆண்டு பெப்ரவரி 24ஆம் திகதி முதல் அந்நாட்டின் மீது போர் தொடுத்து வருகிறது. இவ்விரு நாடுகளுக்கும் இடையே ஏற்பட்டிருக்கும் போர், மூன்று ஆண்டுகளைக் கடந்தும் தீவிரமாக நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.