தம்மீதான குற்றச்சாட்டுகள் தொடர்பில் சுயாதீன விசாரணை கோரி ஜனாதிபதிக்கு நடேசன் கடிதம்

06.10.2021 14:37:33

தனக்கும், தனது மனைவிக்கும் எதிராக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பில் சுயாதீன விசாரணையொன்றை மேற்கொள்ளுமாறு திருக்குமரன் நடேசன் ஜனாதிபதியிடம் கோரியுள்ளார்.

உலகின் பெரும்புள்ளிகள் பலரின் மறைமுக சொத்துக்கள் தொடர்பான தகவல்களை வெளிப்படுத்திய பெண்டோரா பேப்பர்ஸ் அல்லது பெண்டோரா ஆவணத்தில் பெயர் குறிப்பிடப்பட்டிருந்த இலங்கையின் பிரபல தொழிலதிபரான திருக்குமரன் நடேசன், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு கடிதமொன்றை அனுப்பியுள்ளார்.

தனக்கும், தனது மனைவியான முன்னாள் அமைச்சர் நிருபமா ராஜபக்ஷவுக்கும் சொந்தமான மறைமுக வங்கிக் கணக்குகள் மற்றும் சொத்துக்கள் வெளிநாடுகளில் உள்ளதாகக் குறித்த ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாக அக்கடிதத்தில் அவர் தெரிவித்துள்ளார்.

அவ்வாறே, குறித்த ஆவணத்தில் பெயர் குறிப்பிடப்பட்டுள்ள அனைவரும் குற்றவாளிகள் என்ற பொதுவான கருத்து தற்போது சமூகத்தின் மத்தியில் வியாபித்துள்ளது என்றும், குறித்த ஆவணத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளவர்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளுமாறு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் உள்ளிட்ட உலக தலைவர்கள் பெரும்பாலானோர் உத்தரவிட்டுள்ளனர்.

இந்நிலையில், தம்மீதான குற்றச்சாட்டுகள் பொய்யானவை என்றும், தாம் எந்தவொரு குற்றச் செயற்பாடுகளையும் மேற்கொள்ளவில்லை எனவும், திருக்குமரன் நடேசன் தனது கடிதத்தினூடாக ஜனாதிபதிக்கு சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்நிலையில், ஓய்வுபெற்ற நீதிபதியொருவரின் தலைமையிலான விசாரணைக் குழாமொன்றினூடாக இது தொடர்பில் உடனடியாக விசாரணைகளை மேற்கொண்டு, தனது மனைவியின் நற்பெயருக்கு ஏற்பட்டுள்ள கலங்கத்தை துடைப்பதற்கான பின்னணியை உருவாக்கித் தருமாறு அவர் மேலும் கோரியுள்ளார்.

தம்மீதான குற்றச்சாட்டுகளின் காரணமாகத் தாம் மிகவும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளதுடன், கடுமையான மன உளைச்சலுக்கும் உள்ளாகியுள்ளதாக அவர் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

எனவே, தமது கோரிக்கையை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.