பாகிஸ்தானுக்கு இங்கிலாந்து பதிலடி !

19.07.2021 10:55:04

 

பாகிஸ்தான் அணிக்கெதிரான இரண்டாவது ரி-20 போட்டியில், இங்கிலாந்து அணி 45 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது.

இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட ரி-20 தொடரை இங்கிலாந்து அணி, 1-1 என்ற கணக்கில் சமநிலைப் படுத்தியுள்ளது.

ஹெடிங்லீ- லீட்ஸ் மைதானத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற பாகிஸ்தான் அணி, முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி, 19.5 ஓவர்கள் நிறைவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 200 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, ஜோஸ் பட்லர் 59 ஓட்டங்களையும் லிவிங்ஸ்டன் 38 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சில், மொஹமட் ஹஸ்னெய்ன் 3 விக்கெட்டுகளையும் இமாட் வசிம் மற்றும் ஹரிஸ் ரவூப் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் ஷாயின் அப்ரிடி மற்றும் சதாப் கான் ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இதனைத்தொடர்ந்து 201 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய பாகிஸ்தான் அணியால், 20 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 155 ஓட்டங்களை மட்டுமே பெற முடிந்தது. இதனால் இங்கிலாந்து அணி 45 ஓட்டங்களால் வெற்றிபெற்றது.

இதன்போது அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, மொஹமட் ரிஸ்வான் 37 ஓட்டங்களையும் சதாப் கான் ஆட்டமிழக்காது 36 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

இங்கிலாந்து அணியின் பந்துவீச்சில், சகீப் மொஹமுத் 3 விக்கெட்டுகளையும் அடில் ராஷித் மற்றும் மொயின் அலி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் டொம் கர்ரன் மற்றும் மெத்தியு பார்கின்ஸன் ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இப்போட்டியின் ஆட்டநாயகனாக 16 பந்துகளில் 1 சிக்ஸர் 6 பவுண்ரிகள் அடங்களாக 36 ஓட்டங்களை பெற்றுக்கொண்ட மொயின் அலி தெரிவுசெய்யப்பட்டார்.