
"பிணைக் கைதிகள் விரைவில் விடுவிக்கப்படுவார்".
இஸ்ரேலிய பிணைக் கைதிகள் விரைவாக விடுவிக்கப்படுவார்கள் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இஸ்ரேல்-ஹமாஸ் இடையிலான போர் நிறுத்தம் தொடர்பான 20 அம்ச ஒப்பந்தத்தை வெளியிட்டதோடு மட்டுமல்லாமல் அதன் மீதான முடிவை எடுக்கவும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கொடுத்த அழுத்தத்தின் விளைவாக மோதலில் உள்ள இரு தரப்பும் பேச்சுவார்த்தைக்கு முன்வந்துள்ளன. |
டிரம்ப் வெளியிட்ட இந்த 20 அம்ச ஒப்பந்தத்தின் முக்கிய நிபந்தனையான இஸ்ரேலிய பிணைக் கைதிகள் விடுவிப்பதற்கு ஹமாஸ் ஒப்புக் கொண்டதாக தெரியவந்துள்ளது. மேலும் இது குறித்த விரிவான மறைமுக பேச்சுவார்த்தை திங்கட்கிழமை ஹமாஸ் மற்றும் இஸ்ரேல் இடையே எகிப்தில் நடைபெற உள்ளது. இந்நிலையில் காசாவில் சிறைப்பிடித்து வைக்கப்பட்டுள்ள இஸ்ரேலிய பிணைக் கைதிகள் விரைவில் விடுவிக்கப்படுவார்கள் என நம்புவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் நம்பிக்கை தெரிவித்துள்ளார். மேலும் ஒப்பந்தத்தில் மாற்றங்கள் எதுவும் செய்யப்படுமா என செய்தியாளர்கள் கேட்டதற்கு, எந்தவொரு நெகிழ்வுத்தன்மையும் தேவையில்லை, அனைவரும் இதற்கு உடன்பட்டுள்ளனர், இருந்தாலும் இத்தகைய ஒப்பந்தத்தில் எப்போதும் சில மாற்றங்கள் இருக்கும் என்று டிரம்ப் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ள ஒப்பந்தம், சிறந்த ஒப்பந்தம் என்றும், இஸ்ரேலுக்கும், அரபு உலகிற்கும், இஸ்லாமிய உலகிற்கும் இது சிறந்த ஒப்பந்தம் என்று டிரம்ப் தெரிவித்துள்ளார். |