திமுக அரசுக்கு 72 மணி நேரம் கெடு விதித்த அண்ணாமலை

22.05.2022 16:21:20

 

தமிழ்நாட்டை ஆளும் திமுக அரசு, 72 மணி நேரத்தில் பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வேண்டுமென தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கெடு விதித்துள்ளார்.

பெட்ரோல் மீதான கலால் வரி 8 ரூபாயும், டீசல் மீதான கலால் வரி 6 ரூபாயும் குறைக்கப்படுவதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று அறிவித்தார்.

இதைத்தொடர்ந்து, தமிழக அரசு தனது வரியை குறைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

இந்த நிலையில் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, ஒரு பக்கம் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து கொண்டே இருந்தாலும் கூட மோடி விலையை குறைத்து இருக்கிறார்.

திமுக அரசு செயல் தன்மை இல்லாத அரசு. தேர்தல் அறிக்கையில் கூறியதை செய்யாமல் உள்ளது. அரசியல் லாபத்திற்காக திமுக தேர்தல் அறிக்கையில் பெட்ரோல், டீசல் விலையை குறைப்போம் என்று கூறி உள்ளது.

72 மணி நேரத்திற்குள் கொடுத்த வாக்குறுதி படி பெட்ரோல், டீசல் விலையை 5 ரூபாய் குறைக்க வேண்டும். சமையல் எரிவாயு விலையை 100 ரூபாய் குறைக்க வேண்டும் இல்லை என்றால் கோட்டையை முற்றுகையிட்டு பாஜக போராட்டத்தில் ஈடுபடும் எனத் தெரிவித்துள்ளார்.