மே.தீவுகள் அணிக்கெதிரான இரண்டாவது ஒருநாள் போட்டி: இந்தியா அணி சிறப்பான வெற்றி!

25.07.2022 11:16:45

மேற்கிந்திய தீவுகள் அணிக்கெதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில், இந்தியக் கிரிக்கெட் அணி 2 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றுள்ளது.

 

இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை, 2-0 என்ற கணக்கில் இந்தியா அணி கைப்பற்றியுள்ளது.

ட்ரினிடெட் மைதானத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற மேற்கிந்திய தீவுகள் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்திய தீவுகள் அணி, நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில், 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 311 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இதன்போது அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, சாய் ஹோப் 115 ஓட்டங்களையும் பூரான் 74 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

இந்தியக் கிரிக்கெட் அணியின் பந்துவீச்சில், சர்துல் தாகூர் 3 விக்கெட்டுகளையும் தீபக் ஹூடா, அக்ஸர் பட்டேல் மற்றும் சாஹல் ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இதனைத்தொடர்ந்து 312 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய இந்தியக் கிரிக்கெட் அணி, 49.4 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு வெற்றி இலக்கை கடந்தது. இதனால், இந்தியக் கிரிக்கெட் அணி 2 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றது.

இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, அக்ஸர் பட்டேல் ஆட்டமிழக்காது 64 ஓட்டங்களையும் ஸ்ரேயஸ் ஐயர் 63 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

மேற்கிந்திய தீவுகள் அணியின் பந்துவீச்சில், அல்சார்ரி ஜோசப் மற்றும் கெய்ல் மேயர்ஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் ஜெய்டன் சீல்ஸ், ரொமாறியோ செப்பர்ட் மற்றும் அகீல் ஹொசைன் ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இப்போட்டியின் ஆட்டநாயகனாக, 35 பந்துகளில் 5 சிக்ஸர்கள் 3 பவுண்ரிகள் அடங்களாக ஆட்டமிழக்காது 64 ஓட்டங்களை பெற்றுக்கொண்ட அக்ஸர் பட்டேல் தெரிவுசெய்யப்பட்டார்.