இலங்கை வந்த இந்திய பாதுகாப்பு அமைச்சர்!

08.09.2026 15:00:00

இந்தியப் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இன்று (08) இலங்கை வந்துள்ளார்.

இந்திய விமானப்படையின் சிறப்பு விமானம் மூலம் இன்று பிற்பகல் இலங்கையை வந்தடைந்தார்.

 

அவர் இன்று முதல் 2026 செப்டம்பர் 10 ஆம் திகதி வரை இலங்கையில் தங்கியிருப்பார்.

இந்த விஜயமானது இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

இந்தியப் பாதுகாப்பு அமைச்சர் தனது பயணத்தின் போது, ​​ஜனாதிபதி அனுர குமார திஸநாயக்க, பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் (ஓய்வுபெற்ற) விமானப்படைத் துணை மார்ஷல் சம்பத் துயகோந்தா மற்றும் பல அதிகாரிகளைச் சந்திக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

இந்திய ஊடகத் தகவல்களின்படி, கடந்த ஆண்டு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கு மேற்கொண்ட பயணத்தின் போது கையெழுத்திடப்பட்ட இந்தியா-இலங்கை பாதுகாப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தத்தின் அமுலாக்கம் குறித்த மீளாய்வும் இந்தப் பயணத்தில் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

38 ஆண்டுகளில் இந்தியப் பாதுகாப்பு அமைச்சர் ஒருவர் இலங்கைக்கு மேற்கொள்ளும் முதலாவது பயணம் இதுவாகும்.