அதிகபட்ச பலம் பயன்படுத்தப்படும்

01.08.2022 10:32:13

அதிகபட்ச பலம்

போராட்டங்கள் என்ற போர்வையில் சட்டவிரோத நடவடிக்கைகள் ஈடுபடுவோருக்கு எதிராக அதிகபட்ச அதிகாரம் பயன்படுத்தப்படும் என பாதுகாப்புச் செயலாளர் கமல் குணரத்ன தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தின் நாடாளுமன்றக் குழுவில் உரையாற்றிய போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

நாட்டின் அடிப்படைச் சட்டத்தின் கீழ் போராட்டங்கள் அனுமதிக்கப்பட்டுள்ளன, எனினும் போராட்டங்கள் என்ற போர்வையில் வன்முறையில் ஈடுபவோருக்கு எதிராக அதிக பட்ச பலம் பிரயோகிக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

மூன்று மாதங்களாக பொறுத்துக்கொண்ட இராணுவம்

கடந்த வாரம் அதிபர் ரணில் விக்ரமசிங்க, நடைமுறையிலுள்ள அவசரகாலச் சட்டம் தொடர்பில் விளக்கமளிக்க அரசாங்கத்தின் நாடாளுமன்றக் குழுவை அழைத்திருந்தார்.

அங்கு விசேட உரையாற்றிய கமால் குணரத்ன, தற்போதைய நிலைமையை தானும் பாதுகாப்பு தரப்பினரும் மூன்று மாதங்களாக பொறுத்துக்கொண்டதாக தெரிவித்துள்ளார்.

இராணுவம் பொறுமை காத்திருப்பது கோழைத்தனம் என சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபடுபவர்கள் நினைத்துக் கொண்டிருப்பதாக அவர் கூறியுள்ளார்.

எதிர்காலத்தில் எவரேனும் அரச சொத்துக்களுக்கு அல்லது அரசாங்க அலுவலகங்களுக்கு சேதம் விளைவிக்க முற்பட்டால், அவசரகால சட்ட விதிமுறைகளின் அதிகபட்ச பலம் பயன்படுத்தப்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.